டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் வாக்களிப்பதற்காக 10 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கு இணையாக விவிபாட் இயந்திரங்களும் வாங்கப்பட்டதாகவும், இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவானதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட சாதாரண தேர்தல் செலவுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் அச்சடித்தல் ஆகியவற்றுக்காக ஆன செலவுகளுக்காக திருப்பிச் செலுத்துவதற்காக மத்திய அரசு மேலும் ரூ,339.54 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பொதுத் தேர்தலில் இன்னும் வாக்குச்சீட்டு பயன்படுத்தும் முறையே அமலில் உள்ளது. முற்றிலும் வளர்ந்த நாடுகளான பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றம் ஜப்பான் போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ள காரணத்தினால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சுதந்திர இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வந்தது. வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி வாக்களிப்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் அதிக காலதாமதம் ஆவதையடுத்து, பிற நாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை முதன் முதலில், கடந்த 1982ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் பரூர் இடைத் தேர்தலின்போது சோதனை முயற்சியாக 50 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
பின்பு சிற்சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் அவை படிப்படியாக நிவர்த்த செய்யப்பட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது லோக்சபா தேர்தல் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற அதிக அளவில் வாய்ப்பிருப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு லோக்சபாவுக்கும் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலுக்கு சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி 17ஆவது லோக்சபாவுக்கு சுமார் 48.78 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணித்துச் சொன்னது.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களின் கைவிரல்களில் வைக்கப்படும் மை பாட்டிலுக்காக மட்டுமே சுமார் 33 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. மேலும் இதற்காக சுமார் 33 லட்சம் மை பாட்டில் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது. தற்போது தேர்தலும் நடந்து முடிந்து புதிய ஆட்சியும் அமைந்து பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்காக சுமார் 3 ஆயிரத்து 902.17 கோடி ரூபாய் செலவானதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை 78 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலுக்கு சுமார் 10 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கு இணையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்கான விவிபாட்(Voter verified paper audit trail-VVPAT) இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை மேற்கொண்ட சாதாரண தேர்தல் செலவுகள் மற்றும் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் அச்சிடும் செலவுகளை மேற்கொண்டதற்காக திரும்பச் செலுத்துவதற்காக மேலும் சுமார் ரூ.339.54 கோடி வரை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.