டெல்லி: இனி உச்ச நீதிமன்ற ஊழியர்களும் டெல்லி காவல் துறை மற்றும் சிபிஐ வட்டத்துக்குள் கண்காணிக்கப்பட இருக்கிறார்களாம்.
பல முறை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, வழக்குகளை பட்டியலிடுவதில் சில சந்தேகங்கள் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
சமீபத்தில் அனில் அம்பானியின் வழக்கை பட்டியலிடுவதில் சில சிக்கல் இருப்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டு பிடித்து, அந்த நீதிமன்ற ஊழியரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
சிஜேஐ தலையீடு
எனவே தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்யே நேரடியாக தலையிட்டு, சிபிஐயில் பணியாற்றும் மூத்த கண்காணிப்பாளர்கள் (SSP - Senior Superintendent of Police) மற்றும் கண்காணிப்பாளர் (Superintendent of Police) பதவியில் இருப்பவர்களை, உச்ச நீதிமன்ற பதிவு அலுவலகத்தில் நடக்கும் தவறுகளை விசாரித்து கண்டு பிடிக்க, உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்திருக்கிறார்.
முதல் முறை
காவல் துரையில் உயர் பதவியில் இருப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தின் பதிவு அலுவலகங்களில் கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர்கள் மற்றும் கிளை அதிகாரிகளாக அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் உச்ச நீதிமன்ற பதிவு அலுவலகங்களில் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதோடு, எந்த உச்ச நீதி மன்ற ஊழியர்கள் மீது புகார் எழுந்தாலும். அந்த விவகாரங்களையும் இவர்கள் தான் விசாரிப்பார்களாம்.
ஏன் இப்போது
சமீபத்தில் தொழிலதிபர் அனில் அம்பானியின், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பட்டியல் இடுவதில் சில முறைகேடுகள் நடந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அனில் அம்பானிக்கு சாதகமாக பட்டியலிட்டு அவரை காப்பாற்ற முயன்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் எஃப் நாரிமன் கண்டு பிடித்து தலைமை நீதிபதியிடம் புகாரளித்து முறையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். தவறு செய்த இரண்டு உச்ச நீதிமன்ற ஊழியர்கள் இருவரையும் வேலையை விட்டே நீக்கி இருக்கிறார்கள்.
ஒரு வழக்கு
இந்த உச்ச நீதிமன்ற பதிவு அலுவலக ஊழலைப் பற்றியும், பிரச்னைகளைப் பற்றியும் ஒரு இளம் வழக்கறிஞர் போதுமான ஆதாரங்களோடு உச்ச நீதிமன்றத்திலேயே ஒரு affidavit தாக்கல் செய்திருக்கிறார். இந்த பிரச்னையை சமாளிக்க உச்ச நீதிமன்றம் ஏ கே பட்நாயக் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏ கே பட்நாயக்கின் கமிஷனுக்கு உதவ மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation), உள்நாட்டு உளவுப் பிரிவு (Intelligence Bureau) மற்றும் டெல்லி காவல் துறை என பலரையும் உதவச் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஆக அனில் அம்பானி ஒருவரின் வழக்கில் செய்த தவறினால் இனி ஒட்டு மொத்த உச்ச நீதிமன்றமே பல்வேறு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வரப் போகிறது.