டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் எதிர்நோக்குவதாக மத்திய நிதித்துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால் இது சுமார் 32 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டில் 50 ஆயிரம் கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்த கையோடு பிப்ரவரியில் 2ஆவது தவணையாக 28 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொகையை ரிசர்வ் வங்கியின் ஆண்டுக்குழு கூட்டம் முடிந்த உடனே வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் அளிக்கும் உபரித் தொகையின் மூலம் நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை சுமார் 3.4 சதவிகிதத்தில் இருந்து 3.3 சதவிகிதமாக குறையும் என்றும், மத்திய அரசு எதிர்பார்க்கும் 90 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் ஆண்டுக்குழுக் கூட்டம் முடிந்த உடனே வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கையிருப்பு ரூ.9.6 லட்சம் கோடி
மத்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய வருவாயாக இருப்பது, பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி, ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது, மற்றும் அந்நியச் செலாவணி முதலீடு போன்றவற்றால் கிடைக்கும் லாபம் ஆகும். இப்படி கிடைக்கும் லாப வருமானமே ஆண்டுக்கு குறைந்தபட்சமாக இருப்பாக ரூ.3 லட்சம் கோடி வரையிலும் இருக்கும். தற்போது இந்த உபரி இருப்பானது சுமார் 9.6 லட்சம் கோடியாக உள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால் இது சுமார் 28 சதவிகிதம் அதிகமாகும்.
தனிப்பட்ட அதிகாரம்
இன்றைக்கு வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரும்பாலான நாடுகள் எல்லாம் நிதி நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டு இருந்தாலும், இந்தியா மட்டும் தொடர்ந்து எந்தவிதமான பொருளாதார நெருக்கடியிலும், நிதி நெருக்கடியிலும் சிக்கிக்கொள்ளாமல் தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு முக்கிய காரணமே ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரமும் ரிசர்வ் வங்கி கடைபிடித்து வரும் உறுதியான நிதிக் கொள்கையும், கையிருப்பாக வைத்திருக்கும் உபரித் தொகையும் தான்.
மத்திய அரசுக்கு டிவிடெண்ட்
ரிசர்வ் வங்கியின் முக்கிய பாதுகாப்பு ஆயுதமான உபரி கையிருப்பில் இருந்துதான் மத்திய அரசு கேட்கும் போதெல்லாம், தான் செயல்படுத்தும் சமூக நலத்திட்ட உதவிகளுக்கு டிவிடெண்ட் தொகையாக அவ்வப்போது எடுத்துக் கொடுப்பது நடைமுறையாகும். கடந்த 2018ஆம் ஆண்டு உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, ஆகஸ்டு மாதத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயை டிவிடெண்டாக ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது.
பிஎம்-கிஷான் திட்டம்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் திடீரேன ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து, அந்தப் பதவிக்கு சக்தி காந்ததாஸ் கொண்டுவரப்பட்டார். அவர் ஆளுநராக வந்த உடனே பிப்ரவரி மாதத்தில் ரூ.28 ஆயிரம் கோடியை டிவிடெண்டாக வழங்கினார். ரிசர்வ் வங்கி வழங்கிய டிவிடெண்ட் தொகையை வைத்தே, அப்போது இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பிஎம்-கிஷான் (PM-KISSAN) திட்டத்திற்காக செலவிடப்பட்டது.
ரூ.1.06 லட்சம் கோடி கிடைக்கும்
சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடித்தது. உடனடியாக நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்துமுடித்துவிட்டது. பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கி மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளிடமிருந்து டிவிடெண்ட், பங்கு விலக்கல் மற்றும் கூடுதல் உபரித் தொகையாக சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
மறுசுழற்சிக்கு உதவும்
இதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் டிவிடெண்டாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிற பொதுத்துறை வங்கிகளுக்கு மறுசுழற்சி நிதி வழங்க முடியும் என்றும் எதிர்பார்ப்பதாக மத்திய நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
90 ஆயிரம் கோடி
ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் அளிக்கும் உபரித் தொகையின் மூலம் நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை சுமார் 3.4 சதவிகிதத்தில் இருந்து 3.3 சதவிகிதமாக குறையும் என்றும், மத்திய அரசு எதிர்பார்க்கும் 90 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் ஆண்டுக்குழுக் கூட்டம் முடிந்த உடனே வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அனைவருக்கும் நிதியாண்டு என்பது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலும் தான். ஆனால் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு என்பது ஜூலை முதல் ஜூன் வரையிலான காலம் என்பது குறிப்பிடத்தக்கது.