லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கும் பயனிகளின் தனிப்பட்ட விவரங்களை கணினியின் மூலம் ஹேக்கர்கள் திருடிய குற்றத்திற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சுமார் ஆயிரத்து 571 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பயணிகளின் தனிப்பட்ட விவரம் என்பது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அதை திருட்டில் இருந்து பாதுகாக்க தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சிரமம் என்பது அதைவிட அதிகம் என்பதை சட்டம் தெளிவாக விளக்கியுள்ளது. அந்த சுதந்திரம் பறிபோக காரணமாக இருந்ததை ஒத்துக்கொள்ள முடியாது என்று பிரிட்டிஷ் தகவல் ஆணையர் தெளிவாக கூறினார்.
உலகின் முன்னணி சர்வதேச விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சராசரியாக 1 நிமிடத்திற்கு ஒரு விமானம் புறப்பட்டுச் செல்லும். அதே போல் விமான நிலையத்தில் வந்து இறங்கும். தினசரி சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் விமான பயணிகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்துவருகின்றனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 280 விமானங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு தன்னுடைய விமான சேவையை நடத்தி வருகிறது.
விமான பயணிகளுக்கு பிடித்தமான விமான நிறுவனமாக இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், தற்போது திருட்டுப் புகாரில் சிக்கியுள்ளது. பிரிட்டிஷ் .ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் ஹேக்கர்களின் உதவியுடன் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது பற்றிய புகாரை விசாரித்த இங்கிலாந்து தகவல் ஆணையத்தின் தலைவர் எலிசபெத் டெனாம் (Elizabeth Denham) பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, சுமார் ஆயிரத்து 571 கோடி ரூபாய் அபராதம் விதித்ததோடு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு நோட்டீஸும் அனுப்பி இது பற்றி பதில் அளிக்குமாறு கூறியது.
இது பற்றி விளக்கமளித்த தகவல் ஆணையத் தலைவர், விமான பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், அவ்வளவுதான், இதில் மற்றவர்கள் தலையிட்டு அவற்றை திருடுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. இதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
அதோடு, தனிப்பட்ட நபர்கள் மன உளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளாகிறார்கள். அவர்கள் தங்களின் தனிமனித சுதந்திரம் பறிபோனதாக வேதனைப்படுகிறார்கள். மற்றவர்களிடம் நீங்கள் (பிரிட்டிஷ் ஏர்வேஸ்) தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகளை ஒப்படைக்கும் போது அதிக கவனத்துடன் இருந்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டியது கட்டாயம் என்று இங்கிலாந்து தகவல் ஆணையத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, தனி நபர்களின் விவரங்கள் திருடப்பட்ட குற்றதிற்காக பிர்ட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு சுமார் 1,571 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், இது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த ஆண்டு விற்றுமுதலில் (Turnover) 1.5 சதவிகிதம் மட்டுமே என்றும் தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மறுப்பு தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்ஸ் க்ரூஸ் (Alex Cruz) இந்த தண்டனை எங்கள் நிர்வாகத்திற்கு ஆச்சர்யமும் ஏமாற்றமும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் மோசடியோ தகவல்கள் திருடப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரமோ கிடைக்கவில்லை. இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அலெக்ஸ் க்ரூஸ் தெரிவித்துள்ளார்.