டெல்லி : கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும், கறுப்பு பண முதலைகளுக்கு வரும் செபடம்பரில் ஆப்பு வைக்க காத்திருக்கிறது சுவிஸ் வங்கி.
ஒரு புறம், கறுப்பு பணத்தை எப்படியேனும் கணக்கில் கொண்டு வந்து விட வேண்டும் என்று கூறப்பட்டாலும், அதற்காக சரியான விடைகள் தான் கிடைக்கவில்லை.
மோடி கடந்த முறை பிரதமராக இருந்த போதே இதற்காக சுவிஸ் வங்கியை அணுகினார். ஆனால் முதலில் தர மறுத்த சுவிஸ் வங்கி, பின்னர் நிலைமையை புரிந்துக் கொண்டு ஒப்பந்த அடிப்படை இந்தியர்களின் கணக்கு விவரங்களை வைக்க அனுமதி கொடுத்தது.
இந்த நிலையில் இதுவரை மிக இரகசியமாக மட்டுமே பெயரில் சில எழுத்துகளை மட்டுமே கொடுத்து வந்தது. ஆனால் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட படி, இந்தியர்களின் கணக்கு விவரங்களை அளிக்க திட்டமிட்டுள்ளதாக சுவிஸ் வங்கி அதிரடியாய் அறிவித்துள்ளது.
ஆமாங்க.. இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியர்களின் கணக்கு விவரங்களையும், பண பரிவர்த்தனைகளையும் பகிர்ந்து கொள்ள இந்திய அரசு சுவிஸ் வங்கியோடு ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, அந்த சமயத்தில் பல சுவிஸ் வங்கி கணக்குகள் பல மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஆண்டில் மூடப்பட்ட கணக்குகளையும் சேர்த்து, வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என, சுவிஸ்டர்லாந்து நிதித்துறை தெரிவித்துள்ளது.
இது சுவிஸ் வங்கியிடமிருந்து அளிக்கப்படும் முதல் கணக்கு ஆகும். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் கணக்கை முடித்துக் கொண்டாலும் அதன் விவரங்களும் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய வெளியுறவுத் துணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார். அதோடு இந்தக் கணக்கு ஒப்பந்தகள் மிக இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எது எப்படியோ கறுப்பு பண முதலைகளிடத்தில், குறிப்பாக ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் பணத்தை கண்டுபிடித்தாலே இந்தியாவின் பல்லாயிரம் கோடி கடன்கள் அடைப்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.