டெல்லி: இந்தியா தற்போது கடைபிடித்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அனைத்தும் சுத்த பிற்போக்குத்தனமாகவும் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக உள்ளதாகவும் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அமெரிக்க அரிசிடம் புகார் தெரிவித்துள்ளது.
அதோடு தற்போது நடைமுறையில் உள்ள ஸ்டார்ட் அப் விதிமுறைகளை புரிந்துகொள்வதற்கே குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்பதால் இதனால் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்றும் வால்மார்ட் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்பாரி வைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முனைப்பில் மத்திய அரசு தொடர்ந்து வேகம் காட்டி வருகிறது. இதன் முதல் கட்டமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவதற்கும், அதிக அளவில் தொழில் முனைவோரை தொழில் தொடங்க வைப்பதற்கும் மத்திய அரசு அதிக ஊக்கம் கொடுத்து வருகிறது.
அதே போல் நாட்டில் எத்தனேயோ நபர்கள் தங்கள் ஐடியாக்களை செயல்படுத்தவதற்கு கையில் மூலதனம் இல்லாமல் தவித்து வருவதை அறிந்த மத்திய அரசு புதிதாக ஸ்டார்ட் அப் என்னும் புதிய உத்தியில் தொழில் தொடங்கவும் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகி வெற்றி நடைபோட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முக்கிய பங்காற்றி வருவதை அறிந்த மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதத்தில் உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தக விதிமுறைகளை வகுத்தது.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் வர்த்தக விதிமுறைகள் மிகவும் பிற்போக்குத்தனமாகவும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாகவும் இருப்பதாகவும் பிரபல ஆன்லைன் வர்த்தகம் மற்றும் சூப்பர் மார்கெட் நிறுவனமான வால்மார்ட் அமெரிக்க அரசாங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளது.
இந்தியா வகுத்துள்ள ஆன்வர்த்தக விதிமுறைகள் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கே குறைந்தது ஆறு மாதகால அவகாசம் வேண்டியிருக்கும் என்பதால், எங்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்றும் வார்மார்ட் நிறுவனம் அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்த வால்மார்ட் நிறுவனத்தின் சர்வதேச அரசியல் விவகார இயக்குநர் சாரா தோர்ன் (Sarah Thorn), நாங்கள் குறிப்பிட்டது பழைய கோரிக்கை என்றும், அதில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயல், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆன்லைன் வர்த்தக விதிமுறைகள், இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், சிறு வர்த்தகர்களையும் காப்பாற்றும் முயற்சி தான். அதேபோல் வர்த்தக விதிமுறைகள் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கு சிக்கல் தரும் விதமாக இருந்தால் அதை தீர்ப்பதற்கும் இந்தியா தயாராக உள்ளது என்றும் கூறினார்.