தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக இருக்கும் Anshula Kant, உலக வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக (CFO) பதவி ஏற்கப் போகிறார்.
இவர் டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் ஹானர்ஸ் படித்தவர். அதன் பின் தன் முதுகலை பொருளாதாரத்தை டெல்லி பொருளாதாரப் பள்ளியில் (Delhi School of Economics) படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Anshula Kant-க்கு நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரி பதவி வழங்கப்படுவதை உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் மால்பாஸ் நேற்று (ஜூலை 12, 2019) உறுதி செய்திருக்கிறார். Anshula Kant-க்கு உலக வங்கியில் நிதி மற்றும் ரிஸ்க் நிர்வாகம் தான் முக்கிய வேலைகளாக இருக்கும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் சொல்லி இருக்கிறார்.
உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக Anshula Kant-ஐ நியமிக்கும் போது "Anshula Kant-ஐ உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அலுவலராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். Anshula Kant-க்கு 35 ஆண்டுகள் நிதி, வங்கி மற்றும் வங்கித் துறைகளில் நெடிய அனுபவம் கொண்டவர்."
அதோடு "அவருடைய எஸ்பிஐ பணிக்காலங்களில் தொழில்நுட்பத்தை புதிய முறைகளில் பயன்படுத்தியவர். வங்கித் துறையில் ரிஸ்க் நிர்வாகம், கருவூல மேம்பாடு, ஃபண்டிங், கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் வங்கிச் செயல்பாடுகள் என பன்முகத் தன்மை கொண்ட பணி அனுபவம் கொண்டவர். அவரை உலக வங்கியின் நிர்வாகத்துக்குள் அழைத்து வருவதில் மகிழ்கிறேன்" என பாராட்டி இருக்கிறார் டேவிட் மால்பாஸ்.
Anshula Kant-க்கு நிதி சார்ந்த விவரங்களைக் கண்காணிப்பது, ரிஸ்க் மேலாண்மை மற்றும் உலக வங்கியின் நிதி ஆதாரங்களை முதன்மைச் செயல் அதிகாரியோடு இணைந்து தேவையானவர்களுக்கு கொடுப்பது என பொறுப்புகள் நீள்கின்றன.
Anshula Kant எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக இருந்த போது 38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வருவாய் மற்றும் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்திருக்கிறார். எஸ்பிஐ வங்கியின் முதல் தொகையினை (Capital Base) அதிகரித்துக் கொடுத்திருக்கிறார். Anshula Kant கடந்த செப்டம்பர் 2018-ல் இருந்து எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Anshula Kant ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலேயே பல பொறுப்புகளில் பணியாற்றி பல்வேறு சவால்களை சந்தித்து இன்று அதே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.