டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு, ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் கட்டணச் சலுகையை அடுத்து தற்போது அடுத்ததாக உடனடி பணப்பரிமாற்றம் எனப்படும் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்திற்கு கட்டணச்சலுகையை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக தற்போது எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளதாக தெரிகிறது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 1806ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் கல்கத்தா வங்கி எனத் தொடங்கப்பட்ட இந்த வங்கி பின்னர் பாரத இம்பீரியல் வங்கி என உருவெடுத்து அதன் பின்பே பாரத ஸ்டேட் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இது இந்திய அரசு வங்கி என்றும் அழைக்கப்படுகிறது.
மத்திய மாநில அரசுகளின் அனைத்து பரிவர்த்தனைகள், வரவு செலவுக் கணக்குகள், அரசு ஊழியர்களின் ஊதியம் என அனைத்து பரிவர்த்தனைகளையும் எஸ்பிஐ கையாள்வதால் தான் மத்திய அரசு வங்கி என்றும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கிளைகளை கொண்டுள்ளதால் ஸ்டேட் வங்கி எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைமை முகமை வங்கியாகவும் செயல்படுகிறது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி எனப் பெயரெடுத்த எஸ்பிஐ அவ்வப்போது பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. கடந்த வாரம் தனது வாடிக்கையாளர்களின் மின்னணு பணப்பரிமாற்றத்திற்கும் (National Electronic Fund Transfer-NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணச் சலுகையை அறிவித்தது.
அதாவது ஏற்கனவே நெஃப்ட் (NEFT) பரிவர்த்தனைகளுக்கு வசூலித்து வந்த 5 ரூபாய் முதல் 50 ரூபாய வரையிலான கட்டணமும், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலான கட்டணமும் இனிமேல் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்துகொண்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இவ்வகையான கட்டணச் சலுகைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்திருந்தது.
தற்போது எஸ்பிஐ வங்கி அடுத்த அதிரடியாக தனது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஐஎம்பிஎஸ் (IMPS) எனப்படும் உடனடி பணப்பரிமாற்றத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்சமயம் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு 2 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்டு 1ஆம் தேதியில் இருந்து ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதன் மூலம் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதே போல், ஐஎன்பி (INB). எம்பி (MB) மற்றும் யோனோ (YONO) போன்றவற்றுக்கான பரிவர்த்தனைக் கட்டணங்களும் வரும் ஆகஸ்டு 1ஆம் தேதியில் இருந்து வசூலிக்கப்படாது என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.