டெல்லி : ஆதார் என்பது இன்றைய நாளில் இந்தியாவில் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் நிலையில், வங்கிகளில் கூட பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண்ணை காண்பித்து பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட முதல் "பட்ஜெட் 2019ல்" இந்த அறிவிப்பை கொடுத்தது மத்திய அரசு.
இந்த நிலையில் ஏற்கனவே பல இடங்களில், ஆதார் எண் கட்டாய மாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படி பரிவர்த்தனையின் போது கொடுக்கப்படும் ஆதார் எண் தவறாக இருந்தால், அதற்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது அரசின் பல்வேறு திட்டகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்ல, அரசின் பலவேறு திட்டங்களுக்கும், வாழ்வின் பலவேறு விஷயங்களுக்கு ஆதார் இன்றியமையாததாகி வருகிறது.
வங்கிகளிலோ, வீடு, வாகனம் வாங்கும்போது எல்லாவற்றிற்குமே ஆதார் எண் ஆதாரமாக வாங்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆதார் எண்ணை தவறாக கொடுப்பவர்களுக்கு, மத்திய அரசு அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்த திட்டம் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் ஒவ்வொரு முறை ஆதார் எண்ணை தவறாக அளிக்கும் போதும் 10,000 ரூபாய் அபராத தொகையினை கட்ட வேண்டி இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டை உபயோகப்படுத்தலாம் என்று கூறி வந்த நிலையில், அதற்கேற்ப சட்டங்களிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாராம்.
மேலும் இது குறித்து பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் எண் உள்ளது. ஆனால் பான் கார்டு 22 கோடி பேர் மட்டுமே வைத்துள்ளனர். இதனால் பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது தற்போது நினைவு கூறத்தக்கது. எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி தான்.