டெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதில் அளித்து பேசியுள்ளார். அப்போது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை சுமார் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பது பற்றி கூறியவர், அதற்கான திட்டங்கள் தீட்டாமல் இலக்கு நிர்ணயிக்கவில்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
சுமார் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து விவாதத்தின்போது, ப.சிதம்பரம் , ஒவ்வொரு 5 ஆண்டிலும் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு ஆகும் என்பதை பணம் கடன் கொடுப்பவர் கூட சொல்லிவிடுவார். இது இயல்பானது, இது எளிமையான கணக்கீடு என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதாரம் தானாக இரு மடங்காகிவிடுமா?
இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறும்போது, "அப்படியென்றால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தின் மீது ஏன் கவனம் செலுத்தவில்லை? அப்போது ஊழல்கள் தான் தொடர்ந்து கொண்டிருந்தன. எல்லா கவனமும் அதன் மீது தான் இருந்தது. பொருளாதாரம் தானாக இரு மடங்காகிவிடுமா? நாங்கள் எங்களுக்கு எது தேவையோ அதை செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறைகளைக் சுட்டிக் காட்டிய நிர்மலா சீதாராமன்
ஒவ்வொரு முன்னாள் நிதியமைச்சரிடம் இருந்தும் நான் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள விரும்புவது உண்டு என கூறியதுடன், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை தாங்கள் சரியாக கையாண்டதாகவும் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதோடு உயர் பண வீக்கத்தை கட்டுப்படுத்தியதாகவும், வருமானத்தை தானாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தில் திருத்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரிமுறை
நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேசியதில், லைசென்ஸ் பிரச்சனை உள்ளிட்ட 4 சீர்திருத்தங்களை மட்டுமே முன்னாள் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாங்கள் 16-ஐ பட்டியலிட்டிருக்கிறோம். நாங்கள் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் சரக்கு மற்றும் சேவை வரிமுறையை கொண்டு வந்ததே, அது கட்டமைப்பு சீர்திருத்தம் இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலக்குகள் எட்ட முடியும்
வரி இலக்குகள் எட்ட முடியாதவை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதையும், அதற்கு மறுப்பு தெரிவித்த நிர்மலா சீதாராமன், வருமான வரி, உற்பத்தி வரி, சரக்கு மற்றும் சேவை வரி இலக்குகள் எட்டி விடக் கூடியவை தான் என புள்ளி விவரங்களுடன் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.