மும்பை: கடந்த ஜூலை 12, 2019 அன்று, மும்பையில் பள்ளிப் பாடப் புத்தகங்களை பிரசூரிக்கும் பிசினஸ் மேன் ஒருவர் மும்பை சைபர் குற்றப் பிரிவில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். வழக்கம் போல Bank Account-ல் இருந்து பணம் கொள்ளை என புகார் பதிவாகிறது.
கடந்த ஜூலை 7 - 9-ம் தேதிகளுக்குள் தன் Bank Account-ல் இருந்த பணத்தை யாரோ திருடி விட்டதாகப் புகார் கொடுக்கிறார். மும்பை சைபர் செல்லும் தன் வழியில் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
விசாரணையின் முடிவில், கோவந்தி பகுதியில் வசிக்கும் கட்டுமான கான்டிராக்டர் ஒருவர் தான், இந்த வியாபாரியின் Bank Account-ல் இருந்து பணம் திருடியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்ட விசாரணை
கான்டிராக்டரை பிடித்து துருவி துருவி விசாரித்த போது தான் பல உண்மைகள் வெளியே வந்திருக்கிறது. அதில் முதல் விஷயம் இந்த புத்தகம் பிரசூரிப்பவரின் பல விவரங்கள் இந்த காண்டிராக்டருக்கு தெரிந்திருக்கிறது. அதன் பின்னும் காவலர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்கள், புத்தக பிரசூரதார வியாபாரிகள் என பலரிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
ஏமாற்று வேலை
இந்த புத்தக பிரசூரதாரரின் பணத்தை திருடப் போவதாக முடிவான பின், அவருடைய ஆதார் அட்டை தொடங்கி வங்கியின் நெட் பேங்கிங் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் வரை எல்லாவற்றையும் எப்படியோ திருடி இருக்கிறார். கிடைத்த ஆதார் கார்ட், பான் கார்ட் போன்ற தரவுகளை வைத்து அந்த வியாபாரியைப் போலவே வேடம் போட்டு, சிம் கார்டை முதலில் பிளாக் செய்யச் சொல்லி இருக்கிறார். அதோடு பிளாக் செய்த சிம் கார்டு எண் கொண்ட ஒரு புதிய சிம்மையும், அந்த வியாபாரி பெயரிலேயே எடுத்திருக்கிறார் அந்த கான்டிராக்டர்.
பணப் பரிமாற்றம்
வியாபாரி பெயரில் கிடைத்த புதிய சிம்மையும், வியாபாரியின் நெட் பேங்கிங் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 3.3 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்திருக்கிறார். அந்த 3.3 கோடி ரூபாயில் சுமார் 25 லட்சத்தை மட்டும் கான்டிராக்டர் தன் சொந்த வங்கிக் கணக்கிலேயே பணப் பரிமாற்றம் செய்து கொண்டார். அந்த 25 லட்சம் ரூபாயில் சுமார் 1.5 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களையும், இன்னொரு நான்கு லட்சம் ரூபாயை தன் இஷ்டப் படிக்கும் செலவு செய்திருக்கிறார்.
மறுப்பு
கான்டிராக்டர் எப்படி அந்த புத்தக பிரசூரதாரரின் விவரங்களைச் சேமித்தார் என்கிற விவரத்தை காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கிறார்களாம். ஆனால் வெகு ஜன மக்களின் பாதுகாப்பு கருதி அந்த விவரங்களை வெளியில் சொல்ல முடியாது எனவும் மறுத்திருக்கிறார்கள் மும்பை காவல் துறையினர். இந்த 3.3 கோடி ரூபாய் கொள்ளையை இந்த காண்டிராக்டர் தனி ஒருவராக இருந்து செய்ய முடியாது. கான்டிராக்டர் பின்னால் ஒரு கும்பல் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் மேற்கொண்டு சைபர் போலீசார் விசாரித்து வருகிறார்களாம்.