டெல்லி: தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 31ஆம் தேதி நெருங்கிவிட்ட சூழ்நிலையில் கெடு நாளுக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் வேண்டுகோள் விடுத்து வருவதால் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை ஆகஸ்டு மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவிகிதம் வரை தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் செலுத்தும் வருமான வரியின் மூலமே கிடைத்து வருகிறது. இதன்காரணமாக மாதச்சம்பளதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சலுகைகளை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
இவர்கள் எவ்வளவுதான் சலுகைகளை எதிர்பார்த்து இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டிருந்தாலும், மத்திய அரசு என்னவோ தொடர்ந்து தங்களின் செல்லப்பிள்ளையான நிறுவனங்களுக்கே அதிக அளவில் சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறது. வரிச் சலுகை முதல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது வரையில் மத்திய அரசு அவர்களுக்கே கூடுமான வரையில் அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
தற்போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த குஷியில் இருக்கையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிச்சயம் நீட்டிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதிலும் தனிநபர் மற்றும் மாதச்சம்பளதாரர்கள் அனைவரும் இந்த ஆண்டு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவேண்டும் என்று சற்று அதிக ஆவலில் உள்ளனர்.
இருந்தாலும் அவர்களின் ஆவல் நிறைவேறுமா என்பது அநேகமாக அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும். ஆனால் ஒரு சிலர் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு நாள் நீடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதை ஒத்திப்போட்டு வருகின்றனர்.
ஒருவேளை ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கெடு தேதியை நீட்டிக்காமல் போனால், தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் பாடு திண்டாட்டம் தான். இவர்கள் தங்கள் வருமான வரி ரிட்டனை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், அதற்கான அபராதத் தொகையை செலுத்தவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், தங்கள் வருமான வரி ரிட்டனை கெடு நாளான ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாமால், அதற்கு பின்னர் தாக்கல் செய்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும். அதுவும் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் மட்டுமே.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ரிட்டன் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால் அடுத்த தலைவலியாக இவர்கள் வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். கூடவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்பது கவனத்தில் கொள்வது கட்டாயமாகும். அதேபோல் தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களின் நிகர ஆண்டு வருமானம் ரூ.25 லட்சத்திற்கு மேற்பட்டு இருந்தால், அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.
ஒருவேளை தனிநபர் பிரிவினர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் வரும் மார்ச் 31ஆம் தேதியிலும் தங்கள் ரிட்டனை தாக்கல் செய்யாவிட்டால் அதன் பிறகு 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யமுடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
அதேபோல், வருமான வரிச்சட்டம் பிரிவு 244ஏ ((244A)ன் படி, வருமான வரியை முன்கூட்டி செலுத்தியதில் அல்லது மாதச்சம்பளதாரர்களிடம் இருந்து முன்கூட்டி பிடித்தம் செய்த வரியில் (Tax Deduction at Source) ரீஃபண்ட் தொகை ஏதேனும் வரவேண்டியது இருந்தால், ரீஃபண்ட் தொகை மட்டுமே கிடைக்கும். ரீஃபண்ட் தொகைக்கான வட்டி கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.