டெல்லி : தொடர்ந்து வங்கிகளில் கடனை வாங்கி விட்டு மோசடி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும், இந்த நிலையில் தற்போது 33 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் சுமார் 47,204 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கடன் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பூஷன் பவர் & ஸ்டீல் நிறுவனம், முந்தைய மோசடி பேர்வழிகளான விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் மிஞ்சி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆமாங்க.. முன்னதாக அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் பாங்க், ரூ.3,805.15 கோடி கடன் முறைகேடு செய்ததாக பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருந்தது.
33 வங்கிகளில் ரூ.47,204 கோடி கடன்
இந்த நிலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மீது மற்றொரு அரசு வங்கியான அலகாபாத் வங்கி ரூ.1,744 கோடி கடன் மோசடிப் புகாரை ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது. ஆனால் இதுமட்டும் அல்ல, தற்போது இந்த நிறுவனம் மொத்தம் 33 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம், பல்வேறு வகைகளில் கடனாக ரூ.47,204 கோடியை கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7 வருடத்தில் ரூ.47,204 கோடி கடன்!
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் அலகாபாத் வங்கியிலிருந்து மட்டும் அல்ல, கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் மட்டும், இந்த நிறுவனம் தோராயாமாக ரூ.47,204 கோடியை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பூஷன் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மீது, கடந்த வாரம் புகார் அளித்திருந்த பஞ்சாப் நேஷனல் பாங்க், இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதோடு, கணக்கு புத்தகத்திலும் முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் இவ்வாறு இந்த நிறுவனம் வாங்கியுள்ள மொத்த தொகையில், 3191 கோடி ரூபாய் மும்பை பிரிவிலும், துபாய் கிளையில் 49.71 மில்லியன் டாலரையும், ஹாங்காங் கிளையில் 38.51 மில்லியன் டாலரையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் பேங்கிலிருந்து, இந்நிறுவனத்திற்கு முறைகேடாக பெறப்பட்ட 85% நிதி, அதாவது ரூ.4,399 கோடி தற்போது முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல அலகாபாத் வங்கியிலும் குற்றம்!
பஞ்சாப் நேஷனல் பேங்கில் செய்தது போலவே, அலகாபாத் வங்கியும் முறைகேடாகப் பயன்படுத்துதல், கணக்கு புத்தகத்தில் முறைகேடு செய்து நிறுவனங்களின் கூட்டமைப்பிலிருந்து நிதி திரட்டல் போன்ற மோசடிகளை செய்ததாக பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் புகார்கள் அதிகரிக்கலாம்!
இந்த நிலையில் இந்த வழக்கு, தற்போது தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் உள்ளது. இதனால் வங்கிகள் தங்களுடைய பணம் மீளக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனவாம். இந்த நிலையில் பூஷன் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது இன்னும் சில வங்கிகள் புகார் தெரிவிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ பதிவு செய்த புகாரில் சில வங்கிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கதக்கது.
ரூ. 2,348 கோடி மோசடி!
இந்த நிலையில் சிபிஐ-ன் மற்றொரு புகாரில் பூஷன் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ.2,348 கோடி பணத்தை அதனுடைய இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் பேங்க் (டெல்லி மற்றும் சண்டிகார்), ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (கொல்கத்தா), ஐடிபிஐ பேங்க் (கொல்கத்தா), யூகோ பேங்க் (கொல்கத்தா) ஆகிய வங்கிகளின் கடன் கணக்கிலிருந்து 200-க்கும் அதிகமான போலி நிறுவனங்களுக்கு காரணமே இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆயிரம் கோடி மோசடி!
கடன் தொகையை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் இந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங்கால், துணைத் தலைவர் ஆர்த்தி சிங்கால் மற்றும் இயக்குனர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளது சிபிஐ. இதுமட்டும் அல்லாமல் இந்த நிறுவனம் பல்வேறு கடன் வசதிகளைப் பயன்படுத்தி 33 வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.47,204 கோடியை 2007 - 2014-ம் ஆண்டு வரையில் பெற்றுள்ளதாகவும், மோசடி செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது சிபிஐ.
மோசடி லிஸ்டில் பூஷன் பவர் & ஸ்டீல்
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் கொடுத்த வங்கிகளில் முதன்மையானதாக உள்ளதோடு, மற்ற வங்கிகளைப் போல இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கையும் செயல்படாததாக அறிவித்துள்ளது என சிபிஐ கூறியிருந்தது. குறிப்பாக அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் (உரிமையாளர்கள்) வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் நிலையில், தற்போது பூஷண் பவர் & ஸ்டீல் நிறுவனமும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
இனி என்ன செய்ய போகிறது அரசு!
அதோடு விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு அடுத்த படியாக, சஞ்சய் சிங்காலும் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே நிரவ் மோடி விஜய் மல்லையா வழக்குகளாலேயே திண்டாடி வரும் அரசு, இனி என்ன செய்ய போகிறதோ?