டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடியும் தருவாயில் கிட்டத்தட்ட 86 சதவிகிதம் பேர் மீண்டும் சிலிண்டர் நிரப்பலுக்கு விண்ணப்பித்திருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சத் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 3 சிலிண்டர்களுக்கு பதிலாக 5 கிலோ எடையுள்ள 9 சிலிண்டர்களாக மாற்றி வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.45 கிடைக்கும் என்பதோடு பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்புறம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களே அதிக அளவில் பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் (Pradhan Mantri Ujjwala Yojana-PMUY) கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். இதற்காக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் 215 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடும் ஏழை மக்கள் 712 ரூபாய் கொடுத்து மானிய விலை சிலிண்டர் வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால், எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்த மத்திய அரசு அத்திட்டத்தில் மாற்றம் செய்ய முன்வந்தது. இதனையடுத்து தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கு 14.2 கிலோ எடைகொண்ட 3 சிலிண்டர்களுக்கு பதிலாக 5 கிலோ எடை கொண்ட 9 சிலிண்டர்களாக வழங்க திட்டமிட்டுள்ளது.
5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை 260 ரூபாய் மானிய விலையில் வழங்கினால் ஏழை மக்களுக்கும் வாங்குவதற்கும் சிரமம் இல்லாமல் போகும். இதற்காக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் 80 ரூபாய் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஜூலை 8ஆம் தேதி வரையிலும் சுமார் 7.34 கோடி மானிய விலை சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரையிலும் மானிய விலை சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களில் சுமார் 86 சதவிகிதம் பேர் வரையிலும் இரண்டாவது சிலிண்டர்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறைந்ததற்கு, அவர்களின் உணவுப் பழக்க வழக்கம், சமையல் பழக்கம், எரிவாயு சிலிண்டரின் விலை, இலவச விறகு அடுப்பு மற்றும் மாட்டுச் சாணம் போன்ற பல்வேறு காரணிகளையும் சார்ந்துள்ளது. ஆனால் உஜ்வாலா திட்டம் பயன்பாட்டுக்க வந்த பின்பு இவற்றின் பயன்பாடு சுமார் 20 சதவிகிதம் வரையிலும் குறைந்துவிட்டது என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.