டெல்லி: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 100 முதல் 2000 ரூபாய் வரையிலான நோட்டுக்களை அனைவரும் எளிதில் அடையாளும் காணும் வகையில் புதிய மொபைல் ஆப்ஸை மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதேபோல் பார்வைக் குறைபாடு உடையவர்களும் புதிய ரூபாய் நோட்டுக்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் அந்த மொபைல் ஆப்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுக்களை முற்றிலும் ஒழிக்கும் முனைப்பில் மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து செல்லாததாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.
அதற்கு பதிலாக மற்ற நாடுளின் கரன்ஸி நோட்டுகளுக்கு சவால் விடும் வகையில், முற்றிலும் புதிய வடிவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் போர்க்கால அடிப்படையில் அச்சடிப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டன.
உயர் மதிப்புடைய நோட்டுக்களில் தான் அதிக அளவில் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்படுகின்றன, எனவே உயர் நோட்டுக்களை ஒழிக்கவேண்டும் என்று சொல்லி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்துவிட்டு, திரும்பவும் 500 மற்றும் அதைவிட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடப்படுவது எந்தவிதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர்.
இதையடுத்து பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கு குறைந்த மதிப்புடைய 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான நோட்டுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன. இவை அனைத்துமே முற்றிலும் புதிய வடிவில் புதிய தொழில்நுட்பத்தில், பண்டைய கால இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் சின்னங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன.
தற்போது மத்திய ரிசர்வ் வங்கி, மற்றொரு முயற்சியாக பொதுமக்களும், பார்வை இல்லாதவர்களும், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களும் கூட புதிய ரூபாய் நோட்டுக்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்ற உருவாக்கியுள்ளது.
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்பு அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் அனைத்துமே பார்வையில்லாதவர்களும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையிலேயே செதுக்கு முறையில் (Intaglio Printing) அச்சடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள மொபைல் ஆப்ஸ் மூலம் இன்னும் எளிதாக ரூபாய் நோட்டுக்களை அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையிலேய உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
இது பற்றி விளக்கமளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தற்சமயம் புழக்கத்தில் உள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை பார்வைத் திறன் குறைபாடு உள்ள வர்த்தகர்கள் அடையாளம் காண்பதில் சிரமங்கள் உள்ளதை ரிசர்வ் வங்கி புரிந்து கொண்டது. இதனையடுத்தே அவர்களும் ரூபாய் நோட்டுக்களை எளிதில் தெரிந்து கொள்ளும் முறையில் மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளது, என்றனர்.
தற்போது உருவாக்கியுள்ள மொபைல் ஆப்ஸ் மூலம் 100 முதல் 2000 ரூபாய் வரையிலுள்ள நோட்டுக்களை மொபைலில் உள்ள கேமரா மூலமாக படம் பிடிக்கும்போது, மொபைல் ஆப்ஸ் உடனடியாக அதை கிரகித்து ரூபாய் நோட்டுக்களில் உள்ள மஹாத்மா காந்தியின் படத்தையும் அதன் வரிசை எண்களையும் ஒலி வடிவில் தெரியப்படுத்தும். போலியான ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அது குரல் எழுப்பாது என்பதால் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுக்களை விரைவில் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் தற்சமயம் சுமார் 80 லட்சம் பார்வைத் திறன் குறைபாடு மற்றும் பார்வையற்றவர்கள் உள்ளனர். புதிய மொபைல் ஆப்ஸ் பயன்பாட்டுக்கு வரும்போது இவர்கள் அனைவருக்குமே அது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.