அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு வழங்கும்
டெல்லி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதத்தையும், இது தொடர்புடைய மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு கடந்த மூன்று காலாண்டுகளாக வழங்கி வந்த 8 சதவிகித வட்டியை நடப்பு காலாண்டின் தொடக்கத்தில் 0.1 சதவிகிதம் குறைத்து 7.99 சதவிகிமாக வழங்க முடிவெடுத்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) போலவே மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (General Providend Fund-GPF) ஆகும்.
பொது வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (GPF) உறுப்பினராக வேண்டுமானால், 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு அரசு ஊழியராக பணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும். அதே போல் இதில் உறுப்பினராக உள்ளவர்கள் அவசரத் தேவைக்கு இத்திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கவேண்டும் என்றாலும் குறைந்தபட்சம் அவர் 10 ஆண்டுகளாவது பணியில் இருக்கவேண்டியது கட்டாயமாகும்.
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 6 சதவிகிதம் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசின் பங்களிப்பும் 6 சதவிகிதம் மட்டுமே. மேலும், மற்ற பிஎஃப் திட்டங்களுக்கு வழங்கப்படுவது போலவே, ஜிபிஎஃப் (GPF) திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதத்திற்கும் வருமான வரி விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் பிற பிஎஃப் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதங்களைப் போன்றதே. ஜிபிஎஃப் திட்டத்திற்கு கடந்த மூன்று காலாண்டுகளாக சுமார் 8 சதவிகித வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிபிஎஃப் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த 8 சதவிகித வட்டியை நடப்பு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.99 சதவிகிதமாக குறைத்தது. இதைத்தொடர்ந்து ஜிபிஎஃப் திட்டத்திற்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஜிபிஎஃப் திட்டத்திற்கு அளித்து வரும் வட்டி விகிதத்தையும் 0.1 சதவிகிதம் குறைத்து 7.99 சதவிகிதமாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பு என்பது அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் வருங்கால வைப்பு நிதி, ராணுவ வீரர்களின் வருங்கால வைப்பு நிதி, ஆயுதப்படை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி என பத்துக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதித் திட்டங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications