திருச்சூர்: கேரளா சிறைக் கைதிகள் தயாரிக்கும் தலச்சேரி சிக்கன் பிரியாணி காம்போ வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு சிறை நிர்வாகம் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
விய்யூர் சிறைக் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்திகளை விற்பனை செய்வதற்கு ஃப்ரீடம் ஃபுட் ஃபேக்டரி என்றும் அமைப்பு முன்வந்தது. அன்று முதல் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்திகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக கைதிகள் தயாரிக்கும் கேரளாவின் புகழ்பெற்ற தலச்சேரி பிரியாணி கோம்போ வகைகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனைக்கான காம்போ பாக்கெட்டில் சுமார் 300 கிராம் எடையுள்ள பிரியாணி, வறுத்த சிக்கன் பீஸ், மூன்று சப்பாத்திகள், இனிப்பிற்காக ஒரு கேக், காய்கறிகள் அடங்கிய சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில், அதோடு ஒரு வாழை இலை ஆகியவையும் அடங்கும். இந்த பிரியாணி கோம்போவை ரூ.127க்கு விற்பனை செய்வதற்கு ஸ்விக்கி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
திருந்துவதற்கு ஒரு சான்ஸ்
தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும், இது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடல் வரிகள் இவை. தவறு செய்தவர்கள் தான் செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்கும், தப்பு செய்தவர்களுக்கு அதற்கான தண்டனையை அனுபவிப்பதோடு, மேலும் தப்பு செய்யாமல் தன்னை திருத்திக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கவும் ஒரு வாய்ப்பாக உள்ள இடம் தான் சிறைச்சாலை.
கைதிகளின் சமையல்
தண்டனை பெற்றவர்கள், சிறையில் தண்டனையை அனுபவிப்பதோடு, கூடவே தினசரி கூலி வேலைகளையும் செய்து அதற்கான கூலியையும் மொத்தமாக சிறையை விட்டு வெளியேறும் சமயத்தில் பெற்றுக்கொள்வதுண்டு. அதேபோல் சிறைக் கைதிகளுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் அங்குள்ள குறிப்பிட்ட சில கைதிகளே தினசரி சமைப்பதும் நடைமுறையாகும்.
கைதிகளின் கைவண்ணம்
அதே போல், கைதிகள் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியேறும் சமயத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையிலும், சிறையில் அவர்களின் தனித் திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வியை கற்பிக்கச் செய்து அவர்களை ஊக்குவிப்பதும் நாட்டின் அனைத்து சிறைச்சாலையிலும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சிறைச்சாலையில் கைதிகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் முதல் அழகு சாதனப் பொருட்களை வரை அனைத்தையும் சிறைச் சாலையின் சார்பாக விற்பனை செய்து சிறைச்சாலையின் வருவாயை பெருக்குவதோடு பொதுமக்களுக்கும் சிறைக் கைதிகளின் மீது நன்மதிப்பையும் ஏற்படுத்தும் விதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி கோம்போ
அந்த வகையில் மற்றொரு முயற்சியாக தற்போது கைதிகள் தயாரிக்கும் பிரியாணி மற்றும் கோம்போ வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய சிறை நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. கேரளா மாநிலத்தின் புகழ்பெற்ற திருச்சூர் நகர சிறைச் சாலை அதிகாரிகள் பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
முதலில் சப்பாத்தி விற்பனை
கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறைச்சாலை (Viyyur Central Jail). இங்கு கிட்டத்தட்ட 400 ஆண் கைதிகளும் 100 பெண் கைதிகளும் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை சிறைச்சாலையின் சார்பாக விற்பை செய்துவருகின்றனர். குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வர்த்தக அடிப்படையில் சப்பாத்திகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது.
தலச்சேரி பிரியாணி
விய்யூர் சிறைக் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்திகளை விற்பனை செய்வதற்கு ஃப்ரீடம் ஃபுட் ஃபேக்டரி என்றும் அமைப்பு முன்வந்தது. அன்று முதல் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்திகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக கைதிகள் தயாரிக்கும் கேரளாவின் புகழ்பெற்ற தலச்சேரி பிரியாணி கோம்போ வகைகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டமிட்டுள்ளது.
ஸ்விக்கியுடன் இணையும் கைதிகள்
கைதிகள் தயாரிக்கும் பிரயாணி காம்போ வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவெடுத்துள்ளது. இதுபற்றி விளக்கிய விய்யூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிர்மலானந்தன் நாயர், நாங்கள் முதன்முறையாக பிரயாணி காம்போ வகைகளை விற்பனை செய்வதற்காக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தை நாடியுள்ளோம் என்று தெரிவித்தார்.
குறைவான விலை
நாங்கள் ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சப்பாத்திகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அந்த வகையில் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான ஐடியாவை சிறைச்சாலை டிஜிபி (DGP) ரிசிராஜ் சிங் தான் முன்மொழிந்துள்ளார். இதற்கு எங்கள் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் உணவு, அதன் தரம் மற்றும் மிகக்குறைந்த விலை போன்றவை பொதுமக்களிடம் பிரபலமாவதற்கு காரணம் என்று நிர்மலானந்தன் தெரிவித்தார்.
ஆன்லைன் விற்பனைக்கு தயார்
இங்கிருந்து பல்வேறு பிரியாணிகள், சைவ, அசைவ உணவுகள், பேக்கரி உணவுகள் ஆகியவற்றையும் நாங்கள் சிறை வளாகத்தில் விற்பனை செய்து வருகிறோம். இப்போது அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலமாக பிரியாணி மற்றும் கோம்போ வகைகளையும் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்றும், இதற்காக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
பிரியாணி காம்போ ரூ.127 தான்
சிறை நிர்வாகம் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான கோம்போவில் சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு லெக் பீஸ் உள்ளடக்கிய சிக்கன் பிரியாணி, மூன்று சப்பாத்திகள், ஒரு கேக், காய்கறி சாலட், ஊறுகாய், ஒரு மினரல் வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு வாழை இலை ஆகியவை அடங்கும். இந்த காம்போவின் அடக்க விலையானது சுமார் ரூ.127 ஆக இருக்கும் என்று தெரிகிறது.