டெல்லி: 2018 - 19 நிதி ஆண்டில்(ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை), சுமார் 3,133 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் இந்தியாவில் செய்யப்பட்டிருப்பதாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மாநிலங்களைவைக்கு கடிதம் மூலம் பதில் கொடுத்திருக்கிறார். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட சுமார் 51 சதவிகிதம் அதிகமாம். அதோடு இந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் 2019-லேயே 313 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் கடந்த 2016 - 17 நிதி ஆண்டுக்கும் 2017 - 18 நிதி ஆண்டுக்கும் இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது 2017 - 18 நிதி ஆண்டுக்கும், 2018 - 19 நிதி ஆண்டுக்குமான ஒப்பீட்டில் வளர்ச்சி குறைவு தான் என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் 2,070 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றனவாம்.
தற்போதைக்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற்றாக எந்த ஒரு பணப் பரிமாற்ற முறையையும் கொண்டு வருவதாக இல்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின் பணப் பரிமாற்றத்துக்கு கொண்டு வந்த பிம் அப்ளிகேஷன் மூலமான பணப் பரிமாற்றங்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 2017-ல் 31.9 லட்சமாக இருந்ததாம். அந்த எண்ணிக்கை இப்போது ஜூன் 2019 கணக்குப் படி 154.9 லட்சமாக அதிகரித்திருக்கிறதாம்.
BHIM or Bharat Interface for Money சேவை முறையிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் குறைவாக இருப்பதற்கு, இந்தியாவில் ஏற்கனவே பறவிக் கொண்டிருக்கும் பே டிஎம், ஃபோன்பே, கூகுள் டெஸ் போன்ற யூ பி ஐ முறை பேமெண்ட் செயலிகளால் தான் பிம் சேவை அப்ளிகேஷனில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் ஒட்டு மொத்தத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.