டெல்லி: நடப்பு ஆண்டில் இதுவரையிலும் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழையின் அளவு எதிர்பார்த்ததை விட கணிசமாக குறைந்த காரணத்தினால், நடப்பு கோடை பருவத்தில் விதைக்கப்பட்ட பயிர்களின் விளைச்சல் கேள்விக்குறியாகி உள்ளது.
நடப்பு காரிப் பருவத்தின் தொடக்க காலமான ஜூன் 1ஆம் தேதி தொடங்கவேண்டிய தென்மேற்கு பருவ மழை சில மாநிலங்களில் மட்டுமே தலைகாட்டி வருவதால் காரிப் பருவ விளைச்சல் குறைந்தது அறுவடையும் குறைந்துவிட்டது. கடந்த ஜூலை 17ஆம் தேதி வரையிலும் வழக்கமாக பெய்யும் சராசரி அளவைக்காட்டிலும் 16 சதவிகிதம் வரையிலும் பருவமழை குறைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பக்க பலமாக விளங்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பது விவசாயி விளைச்சல் தான். இந்தியாவில் உள்ள விவசாய நிலங்கள் முதல் பெரும் பண்ணை நிலங்கள் வரை கிட்டத்தட்ட 55 சதவிகிதம் வரை பெரிதும் நம்பி இருப்பது தென் மேற்கு பருவ மழையைத் தான். நாடு முழுவதும் உள்ள மக்களில் 70 சதவிகிதம் பேர் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்திய விவசாய விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கும் நெல், கரும்பு, பருத்தி, சோயாபீன்ஸ், கடலை மற்றும் எண்ணை வித்துக்கள் போன்றவற்றிற்கு தென்மேற்கு பருவமழையே நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் உழவுப்பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கி வடகிழக்கு பருவமழையான அக்டோபர் இறுதியில் அறுவடை பணிகள் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பருவமழைப் பொழிவின் 75 சதவிகிதத்தை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையின் மூலம்தான் கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழையின் அளவு எதிர்பார்ததைவிட குறையும்போது அதை சார்ந்திருக்கும் விவசாயமும் குறைந்துவிடுகிறது. விவசாய விளைச்சல் குறையும்போது தானாகவே பொருளாதார வளர்ச்சியும் சரிவையே சந்திக்கும்.
நாட்டின் மத்திய பகுதிகளில் பெரும்பான்மையாக விளையும் பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை, நடப்பு பருவத்தில் பெய்யும் சராசரி அளவைக் காட்டிலும் சுமார் 68 சதவிகிதமும், தென்மாநிலங்களில் அதிமாக விளையும் ரப்பர் மற்றும் தேயிலை விளைச்சலுக்கு தேவைப்படும் சராசரி மழை அளவைக் காட்டிலும் 71 சதவிகிதமும் குறைந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department-IMD) புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதேபோல், கடலை வித்துக்கள், கரும்பு விளைச்சலுக்கு பெயர்பெற்ற மேற்கு மண்டலத்திலும் தென்மேற்கு பருவமழையானது வழக்கமாக பெய்யும் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக பெய்யும் தென் மாநிலங்கள் மற்றும் மத்திய மண்டலங்களில் சராசரி அளவைக் காட்டிலும் சுமார் 16 சதவிகிதம் வரை குறைந்தாலும் கூட, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் அதிக அளவில் மழை பொலிந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 17ஆம் தேதி வரையிலும் கிடைத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்த்தால் தென்மேற்கு பருவமழையானது வழக்கமான சராசரி அளவைக்காட்டிலும் சுமார் 20 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்து