நாக்பூர்: வாராக்கடன் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகள் தற்போது கடன் வழங்குவதில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான நிலையில் உள்ளது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதால் நியாயமாக கடன் தேவைப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடியாத இக்கட்டான சூழலும் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை நன்கு உணர்ந்தே, முறையான கணக்குகள் மற்றும் ஆவணங்களை வைத்திருக்கும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திலேயே கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்ததையும் நிதின் கட்கரி அப்போது சுட்டிக் காட்டினார்.
கடன் கிடையாது
சாதாரணமாக நடுத்தர மக்களுக்கும், மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் தங்களின் அவசரத் தேவைகளுக்கு கடன் வேண்டி பொதுத்துறை வங்கிகளை அனுகினால், கொஞ்சம் கூட மதிப்பதே கிடையாது. அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் அளித்தாலும் சாமானிய மக்களுக்கு சாமானியத்தில் கடன் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் கடனுக்கான வட்டியும் மிக அதிகமாக இருக்கும்.
தற்கொலைக்கு தூண்டுதல்
அப்படி வாங்கிய கடன் தொகையை தொடர்ந்து முறையாக திருப்பி செலுத்தி வரும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சில சமயங்களில் மாதத் தவணையை செலுத்த முடியாமல் போனால், கடன் வாங்கிய சாமான்ய மக்களின் நிலை பரிதாபம்தான். கடன் தொகையை திரும்பச் செலுத்தாதவர்களை அடியாட்களுடன் தேடிவந்து அவர்களை மிரட்டி மிக மோசமாக நடத்தி அவர்களை தற்கொலைக்கும் தூண்டிவதும் உண்டு.
கடனா இந்தா வாங்கிக்கோ
அதற்கு மாறாக, பெரு நிறுவனங்கள் தங்களுக்கு கடன் தேவை என்று சொன்ன உடனேயே ஒரே நாளில் கிடைத்துவிடுகின்றன. அவர்கள் என்னவிதமான தொழிலை நடத்துகின்றன. எத்தனை ஆண்டுகளாக அந்நிறுவனத்தை நடத்துகின்றன. அவற்றின் ஆண்டு விற்றுமுதல் மற்றும் லாபம் எவ்வளவு, அந்நிறுவனங்கள் கேட்கும் கடன் தொகையை அவர்களால் திருப்பிச் செலுத்த முடியுமா, நிறுவனங்கள் செலுத்திய வருமான வரி எவ்வளவு என்ற எந்த விதமான ஆவணங்களையும் பொதுத்துறை வங்கிகள் சரி பார்ப்பதில்லை.
திருப்பி செலுத்துவது கிடையாது
கடன் கேட்கும் நிறுவனங்களின் லாப நட்டக்கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை உள்பட எந்த ஆவணங்களையும் முறையாக ஆராய்ந்து பார்க்காமல், கர்ண பரம்பரை போல் அந்நிறுவனங்கள் கேட்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை பொதுத்துறை வங்கிகள் உடனடியாக அள்ளி வழங்கி வருகின்றன. அதுவும் மிகக்குறைந்த வட்டிக்கே வழங்கி வருகின்றன. அந்நிறுவனங்கள் முறையாக கடன் தவணைகளை திரும்பச் செலுத்துகின்றனவா என்பதைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை.
வாராக்கடனில் வைப்போம்
இப்படி எதைப்பற்றியும் ஆராயாமல் பொதுத்துறை வங்கிகள் கோடிக்கணக்கில் கடனை அள்ளி வழங்குவதால் தான், அந்நிறுவனங்களும் பின்பு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடன் தொகையையும் திருப்பிச் செலுத்துவதையும் மறந்து விடுகின்றன. நிறுவனங்கள் தான் அப்படி என்றால், கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகளும் அந்நிறுவனத்தின் பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. கடன் திரும்ப வந்தால் வரவில் வைப்போம், இல்லாவிட்டால் வராக்கடனில் வைப்போம் என்று அசட்டையாக இருந்துவிடுகின்றன.
வாராக்கடன் மதிப்பு ரூ.1.72 லட்சம் கோடி
நிறுவனங்களுக்கு கடன் அளித்த பொதுத்துறை வங்கிகள், அந்நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிப்பதில் உண்மையான அக்கறை காட்டாமல் இருக்கும் காரணத்தால், அந்த கடன்களெல்லாம் வாராக்கடன்களாக உருமாறிவிடுகின்றன. இப்படி வாராக்கடன்களாக மாறிய தொகையின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.1.72 லட்சம் கோடியாகும். ரிசர்வ் வங்கி எடுத்துவரும் தொடர் நடவடிக்கையினால் தற்போது வாராக்கடனின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
அதிகரிக்கும் வாராக்கடன் பிரச்சனை
இந்நிலையில், நாளுக்கு நாள் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கேட்கும் கடன்கள் மறுக்கப்பட்டு வருகின்றன என்றும் கடன் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு பாதிப்பு
கடந்த சனிக்கிழமையன்று நாக்பூரில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தை திறந்துவைத்து பேசிய நிதின் கட்கரி, சமீப காலமாக பொதுத்துறை வங்கிகள் வழங்கும் கடன்களில் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முறையாக ஆராயாமல் கடன்களை வாரி வழங்குவதால் தான் இந்த பிரச்சனை பூதாகரமாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக உண்மையான முறையான கடன் தேவைப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள் மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வெளிப்படைத் தன்மை
எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி வழங்க முன்வரவேண்டும். அதேபோல், கடன் வாங்கிய நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அவ்வப்போது அறிந்துகொள்வதும் அவசியம் என்றும் நிதின் கட்கரி கூறினார். மேலும், வங்கிகள் கடன் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சிக்கு உறுதுணை
நமது நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அவர்களால் தான் நாட்டில் சுமார் 11 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரு நிறுவனங்களை விட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் சுமார் 10 சதவிகித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவருகின்றன.
ஒரு மணி நேரத்தில் கடன்
பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை நன்கு உணர்ந்தே, முறையான கணக்குகள் மற்றும் ஆவணங்களை வைத்திருக்கும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திலேயே கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்ததையும் நிதின் கட்கரி அப்போது சுட்டிக் காட்டினார்.