ஈரோடு : சிறு தொழில் வகையில் இன்று பல பெண்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஒரு வகை, வீட்டிலிருந்து உணவு தயாரிக்கும் முறை, அப்படி ஒரு முறையை கடந்த 40 வருடங்களுக்கு முன்பே, வீட்டிலிருந்து இட்லி தோசை என தயாரித்து கொண்டு விற்பனை செய்து வந்த தாயின் சிறு தொழிலையே, தற்போது மூன்று அக்கா தங்கைகளும் சேர்ந்து 24 நான்கு வருடங்களாக செய்து வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
உண்மைதான் ஈரோடு கருங்கல்பாளையம் அருகே இத்தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவர்களை பற்றியே இன்றைய சிறு தொழிலில் காண போகிறோம். குடும்பம் ஒன்று என்றாலும் தொழில் ரீதியாக மூவரும் பிரிந்து இந்த ஊரையே கலக்கி வருகிறார்கள்.
அதிலும் நம்ம அனுசுயா இட்லி கடை உரிமையாளர்களான செல்வராஜ், பூமதி தம்பதியினர் இதை கடந்த 24 வருடமாக வீட்டிலிருந்தே குடிசைத் தொழிலாக இதை செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் வேலைக்கு தான் சென்றோம்
ஆரம்பத்தில் நாங்களும் வேலைக்கு தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால் இதை வைத்து பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது, பிள்ளைகளை படிக்க முடியாது என்று ஏதாவது தொழில் செய்யலாமே என்று யோசித்த போது, தெரியாத ஒன்றை தூக்கிக் கொண்டு செய்து நஷ்டமடைவதை விட தெரிந்த ஒரு சிறு தொழிலையே இன்னும் சிறப்பாக செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். ஆமாங்க.. அப்படி தோன்றியது தான் இந்த அனுசுயா இட்லி கடை.
எத்தனை வகை இட்லி கடைகள்?
பொதுவாக மல்லிகைப்பூ இட்லி என்கிற குஷ்பு இட்லி, கப் இட்லி, ஹார்டின் இட்லி, இளநீர் இட்லி, சாண்ட்விச் இட்லி, புதினா, மசாலா வைத்து சான்ட்விச் இட்லி, பெரியதாக தட்டு இட்லி, சீரகம், மிளகு, கொத்தமல்லி உட்பட பல்வேறு பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் காஞ்சிபுரம் இட்லி என பல வகைகளில் தயாரித்து வருகிறோம், இதோடு தற்போது வெஜிடபிள் இட்லி, டிரை நட்ஸ் இட்லி என ஆர்டருக்கு ஏற்றாற் போல தயாரித்து தருகிறோம். இது மட்டும் அல்லாமல் நைஸ் ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், வெஜிடபிள் தோசை, மசால் தோசை, பொடி தோசை போன்றவையும் ஆர்டருக்கு தகுந்தாற் போல வழங்குவோம் என் கிறார்கள் ஈரோட்டை கலக்கும் இந்த தம்பதியினர்.
ஆர்டர்களுக்கு ஏற்றாற்போல் தயாரிப்பு
அனுசுயா இட்லி கடையை பொறுத்த வரை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா என அனைத்தும் தயாரிக்கிறோம். மேலும் ஆர்டருக்கும், ஹோட்டலுக்கும் அவர்கள் கேட்கும் வகைகளை தயாரித்து கொடுப்போம். ஹோட்டல்களில் தனியாக மாஸ்டர் வைத்து, இட்லி, தோசை, சப்பாத்தி, அதற்கு தனி, 'சைடிஷ்' செய்ய செலவு அதிகம் என்பதால், ஹோட்டல் உரிமையாளர்கள் எங்களிடம் வாங்கி சென்று அதில் குறிப்பிட்ட லாபம் வைத்து விற்பனை செய்வார்கள்.
சப்ளை எங்கு?
பொதுவாக கல்யாண வீடாக இருந்தாலும் சரி, காரிய வீடாக இருந்தாலும் சரி, பிறந்த நாள், கல்யாண நாள், கிரக பிரவேசம், அனாதை ஆசிரமங்களுக்கு, ஹாஸ்டல்களுக்கு எந்த விழாவாக இருந்தாலும் எங்களிடம் இருந்து தான் இட்லி செய்து தரப்படும் என்று கூறுகிறார்கள். அதிலும் முகூர்த்த நாள் என்றாலே எங்கள் கடை களை கட்டிவிடும் என்றும், அதிலும் சிலர் மண்டபத்தில் வந்து செய்து கொடுக்க சொல்வார்கள். இட்லி மட்டும் அல்ல, தோசை, ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், மினி இட்லி, தட்டு இட்லி, வெஜிடபிள் இட்லி, ஹார்டின் இட்லி என பலவகையாக கேட்பார்கள், அதுபோன்ற ஆர்டர்களுக்கு, நாங்கள் மண்டபத்திலேயே சென்று செய்து கொடுப்போம். இதற்காக ஒரு இட்லிக்கு இவ்வளோ, ஊத்தப்பத்திற்கு இவ்வளவு என காசு வாங்கி கொள்வோம் என்கிறார்கள்.
ஸ்பெஷல் மாவு
எங்களது இட்லியில் நாங்கள் வெந்தையம் சேர்ப்பதில்லை. ஆனாலும் பொதுவாக எத்தகைய சூழலிலும், பழைய மாவு, புளித்த மாவு, பழைய இட்லி போன்றவைகளை விற்பதில்லை. குறிப்பாக ரேஷன் அரிசி பயன்படுத்துவதில்லை. இருப்பினும், அவ்வப்போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தும் செல்கின்றனர். இதுவே எங்களது இட்லி அதிகளவு விற்பனையவதற்கு காரணம் இதுவும் கூட என்றும் கூறுகிறார்கள்.
மேல்மருவத்தூருக்கு இட்லி சப்ளை
ஒரு புறம் உள்ளூரில் கொடிகட்டி பறக்கும் இந்த ஈரோடு இட்லி கடையின் புகழ், மேல் மருவத்தூர் வரை பரவியுள்ளது. ஆமாங்க.. அடிகளார் பிறந்த நாள், ஆடி பூரம், நவராத்திரி உள்ளிட்ட பல விஷேங்களுக்கு ஆர்டரின் பேரில் செய்து தருவார்களாம். சில சமயம் 1 லட்சம் இட்லிகள் கூட விற்பனை செய்திருக்கிறார்களாம். ஆனால் தற்போது ஆர்டர்கள் குறைந்துவிட்டன. நான்கில் ஒரு பங்கு தான் ஆர்டர் தருகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன?
நாங்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை இட வசதி தான், எங்கள் வீட்டின் ஒரு பகுதியில், தான் 10க்கு 10 ரூமில் செய்து வருகிறோம். இதனால் இட வசதி மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் முன்னர் இருந்ததைவிட அரிசியின் விலை தற்போது மிக அதிகரித்துள்ளது. ஆமாங்க.. இட்லி அரிசியின் விலை 1000 - 1500 வரை இருந்தது தற்போது, 2,900 - 3000 என்று விற்பனையாகி வருகிறது. அதோடு உளுந்து விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. மேலும் விறகு என பல பிரச்சனைகள் உண்டு என்றும் கூறுகிறார்கள் இந்த தம்பதியினர்.
இலாபம் குறைவு தான்?
எங்கள் கடைகளில் அதிகளவு எண்ணிக்கையில் இட்லி விற்பனை ஆனாலும், எங்களுக்கு குறைந்த லாபம் தான் கிடைக்கும். விலைவாசி அதிகரித்தாலும் திடிரென இட்லி விலையை அதிகரிக்க முடியாது, மொத்தமாக செய்து கொடுக்க செல்லும் இடத்திலும் ஆள் கூலி என பலவற்றை கணக்கிட்டு பார்த்தால் இலாபம் மிகக் குறைவு தான் என்று கூறுகிறார் செல்வராஜ்.
விற்பனை விலை எப்படி?
சாதரனமாக ஒரு இட்லி 5ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே மொத்தமாக வாங்கிச் செல்பவர்களுக்கு விலை இன்னும் குறைவாக கொடுப்போம், அதிலும் அனாதை ஆசிரமங்களுக்கு என்று வாங்கிச் செல்பவர்களுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு விலையை குறைத்துக் கொடுப்போம் என்றும் கூறுகிறார் பூமதி. இதே மற்ற இட்லி வகைகள் ஹார்டின் இட்லி, வெஜிடபிள் இட்லி, சாண்விட்ச் இட்லி இவையெல்லாம் விலை சற்று அதிகம், ஏனெனில் அதற்கு வேலை பளுவும் கொஞ்சம் அதிகம் என்றும் கூறுகிறார்கள்.
பிள்ளைகளும் இந்த தொழில் தான்?
இவ்வாறு மிக வெள்ளந்தியாய் இருக்கும் இந்த தம்பதியினர் மகன் மகள் இருவருமே படித்திருந்தாலும், இந்த தொழிலை பொறுத்த வரை அத்துபடி என்றும், அதிலும் தங்களது மகன் கூடவே இருந்து, சில சமயம் அனைத்து வேலைகளையும் செய்வார் என்றும் கூறுகிறார் பூமதி. எதிர்காலத்தில் சிறிய அளவில் தங்களது மகனையும் வைத்து சிறிய ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பதே இந்த தம்பதியின் ஆசையாம்.
வருமானம் எவ்வளவு?
குடும்பத்தை பார்த்து, கூலி ஆட்களுக்கு கூலி கொடுத்து, செலவினங்கள் போக ஓரளவு வருமானம் கிடைக்கிறது. மிகப்பெரிய வருமானம் என்றும் கூறி விட முடியாது. எனினும் நிம்மதியான வருமானம் நிம்மதியான வாழ்க்கை என்று கூறுகிறார்கள்.