மும்பை: PSB Loans in 59 Minutes திட்டத்தின் கீழ், 59 நிமிடத்தில் 5 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க இந்தியாவின் சில பொதுத் துறை வங்கிகள் முன் வந்திருக்கின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா,
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,
ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்,
கார்ப்பரேஷன் பேங்க்,
ஆந்திரா பேங்க்
போன்ற வங்கிகள் இந்த PSB Loans in 59 Minutes திட்டத்தின் கீழ் உறுப்பு வங்கிகளாக இருக்கின்றன.

இதுவரை PSB Loans in 59 Minutes திட்டத்தின் கீழ், மார்ச் 2019 நிலவரப்படி, சுமார் 50,700 கடன் விண்ணப்பங்கள் நாடு முழுக்க வந்திருக்கிறதாம். அதில் சுமாராக 27,900 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கான கடன் தொகைகள் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த PSB Loans in 59 Minutes திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த நவம்பர் 2018-ல் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட போது இந்தியாவில் இருக்கும் சிறு குறு தொழில்முனைவோர்களின் தேவைக்காக 59 நிமிடத்துக்குள் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் கடன் வழங்குவதாக இருந்தது.
சிறு குறு தொழில்முனைவோர்கள், ஒரு லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையான கடனுக்காக விண்ணப்பிக்கலாம் இங்கே விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு ஒரு தகுதிக் கடிதம் வரும். அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு மேலே சொன்ன வங்கிகளில் தங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்வு செய்து கடனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொழில் கடன்களுக்கு சுமார் 8.5 சதவிகிதம் வட்டி நிர்ணயிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இப்போது இந்த திட்டத்தை மேம்படுத்தி, உச்ச வரம்பை ஐந்து கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் பொதுத் துறை வங்கிகள். இதைக் குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மைப் பொது மேலாளர் (MSME - Micro Small and Medium Entrepreneur), தேவி சங்கர் மிஸ்ரா பேசும் போது "விரைவாக கடனுக்கு தகுதியான MSME - Micro Small and Medium Entrepreneur-களைத் தேர்வு செய்வது, வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது போன்றவைகள் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். இப்போது MSME - Micro Small and Medium Entrepreneur-களுக்கான கடன் அளவை ஒரு கோடி ரூபாயில் இருந்து ஐந்து கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதால், அவர்கள் பிசினஸ் அளவும் அதிகரிக்கும் என நம்புகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications