டெல்லி: நாளுக்கு நாள் ஏடிஎம் தொடர்பான மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஏடிஎம் தொடர்பான மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், அதிகளவிலான மோசடி வழக்குகளைக் கொண்டு மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆமாங்கா.. கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மஹாராஷ்டிராவில் மட்டும் 233 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளனவாம்.
இதே டெல்லியில் 179 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதிலும் இதுபோன்ற மோசடி வழக்குகளை கையாளும் வங்கிகள் 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் கையாள்வதாகவும் ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளனவாம்.
இந்த ஏடிஎம் மோசடி வழக்குகளில் டெல்லியைச் சேர்ந்தவர்கள் சுமார் 2.9 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாகவும், இதே மஹாராஷ்டிரா மாநிலம் 4.81 கோடி ரூபாய், தமிழ்நாடு 3.63 கோடி ரூபாயும் இழந்துள்ளன என்றும் ஆர்.பி.ஐயின் அறிக்கையில் வெளியாகியுள்ளன.
இதே 2017 - 2018 ஆம் ஆண்டில் அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் ஏடிஎம் மோசடி தொடர்பான எந்த ஒரு வழக்கையும் தெரிவிக்கவில்லையாம். இருப்பினும் நாடு முழுவதும் ஏடிஎம் மோசடி வழக்குகள் 911 லிருந்து 980 ஆக அதிகரித்துள்ளதாம். டெல்லியில் மட்டும் வங்கிகள் கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் 2.8 கோடி ரூபாய் இழப்பை பதிவு செய்துள்ளனவாம்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 65.3 கோடி ரூபாய் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காவல் துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் கூறுகையில், இந்த ஏடிஎம் திருட்டுகள் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழான திருட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் இது போன்ற திருட்டுகள் டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம்களில் திருடப்படுகின்றன.
உதாரணமாக மோசடி செய்பவர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் சாதனங்களை நிறுவுவதன் மூலம் மற்றவர்களின் அட்டையிலிருந்து தரவை நகலெடுக்கிறார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
சில நேரங்களில் மோசடி செய்பவர்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் பராமரிப்பு முகர்வர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை ஹேக் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த நிலையில் டெல்லி காவல்துறையின் சைபர் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் மையம் தற்போது, இதுபோன்ற வழக்குகளை கையாண்டு இணைய குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.