டெல்லி: தனிநபர் மற்றும் மாதச் சம்பளதாரர்களுக்கு கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வரி நிபுணர்களும், வரி ஆலோசகர்களும் தனிநபர் பிரிவினருக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை அடுத்தே மத்திய அரசு காலக் கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது.

கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான தனிநபர், மாதச் சம்பளதாரர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ஆம் தேதியாகும். இதுவே பொதுவான வழக்கமாகும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது மட்டுமே சில நேரங்களில் காலக் கெடு நீட்டிக்கப்படுவது வாடிக்கை.
குறிப்பாக, அதிக மழைப்பொழிவு, இயற்கைப் பேரிடர் போன்ற இக்கட்டான தருணங்களில் தகவல் தொடர்பு வட்டம் முற்றிலும் துண்டிக்கப்படும் போது மட்டும் சில சமயங்களில் காலக்கெடு நீட்டிக்கப்படும். அதுவும் இயற்கை பேரிடர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இந்த காலக் கெடு நீட்டிக்கப்படுவது வாடிக்கை.
அதே போல், நடப்பு ஆண்டிலும், வட மாநிலங்களில் குறிப்பாக மஹாராஷ்ட்டிரா, டெல்லி, மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பாலான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்து தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டிலும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
மேலும், நடப்பு ஆண்டில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் படிவங்கள் அனைத்தும் முற்றிலும் மாறுபட்டிருப்பதால் அவற்றை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரிட்டன் படிவங்களை தயாரிக்கவும், அதற்கான ஆவணங்களை தயாரிக்கவும் அதிக காலக்கெடு தேவைப்படுவதால், கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து நீட்டிப்பு செய்யவேண்டும் என்று வரி நிபுணர்களும், வரி ஆலோசகர்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம், கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும ஜூலை 31ஆம் தேதியில் இருந்து வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த காலக்கெடு நீட்டிப்பானது, தனிநபர்கள், மாதச் சம்பளதாரர்கள், தனிநபர் அமைப்புகள், இந்து கூட்டுக்குடும்பம், நபர்கள் கூட்டமைப்பு என அனைவருக்கும் இந்த காலக்கெடு நீட்டிப்பு பொருந்தும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதமும் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்வோர் ரூ.10000 அபராதமும் செலுத்தவேண்டிய நிலை இருந்தது. தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்தும் அனைவரும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications