ஹைதராபாத்: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான அமராவதி நகரத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படும் நிதி உதவியை இப்போதைக்கு வழங்க முடியாது என்று சீனாவின் சார்புடைய ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி கை விரித்து விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உலக வங்கியும் ஆந்திர அரசு விண்ணப்பித்திருந்து 2000 கோடி ரூபாயை வழங்க முடியாது என்று மறுத்து, அத்திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பியிருந்த நிலையில் தற்போது சீன வங்கியும் நிதி உதவி அளிக்க முடியாது என்று கை விரித்து விட்டது.
தற்போதைய தலைநகரான ஹைதராபாத் பங்காளியான தெலங்கானாவுக்கு சொந்தம் என்பதால், ஆந்திராவுக்கு என்று தனியான தனித் தன்மையுடைய தலைநகரம் அவசியம் தேவை என்ற சிந்தனையால் உருவானதுதான் அமராவதி நகர் திட்டம் (Amaravati City project).ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது அமராவதி நகர் கட்டமைப்பு திட்டம்.
தற்போது ஹைடெக் சிட்டி (HITEC City) என்று புகழப்படும் ஹைதராபாத் நகரமும் முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது எடுத்த சீரிய முயற்சியால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹைதராபாத் நகரத்திற்குள் நுழைந்தன.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிப் பறிச்சான், என்று. அதுபோலத்தான் தான் சிரமப்பட்டு உருவாக்கிய ஹைடெக் சிட்டியான ஹைதராபாத் நகரத்தை நேற்று வந்த பங்காளியான சந்திரசேகர ராவ் நோகாமல் தட்டிப்பறித்துக் கொண்டு சென்றதால் வேறு வழியே இல்லாமல் இன்னொரு நகர நிர்மானிக்கத் தீர்மானித்தார்.
இதற்காக பாடுபட்டு உருவாக்கியது தான் அமராவதி நகர் திட்டம். இதற்கான மொத்த நிதி சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், உலக வங்கி, சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் கடன் பத்திர வெளியீடு என எட்டுத் திக்கிலிருந்தும் முதலீடுகளை கேட்டிருந்தார்.
அமராவதி திட்டத்திற்கு இது வரையிலும் சுமார் 500 கோடி ரூபாய் வரையிலும் செலவிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவரும் வந்த சூட்டோடு அமராவதி திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
அமராவதி திட்டத்திற்கு உலக வங்கியிடம் கேட்டிருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி என்னவாயிற்று என்று கடந்த வாரம் ஜெகன்மோகன் ரெட்டி, உலக வங்கியிடம் கேட்டதற்கு, அமராவதி திட்டத்திற்கு நீங்கள் கேட்கும் தொகை மிகப் பெரியது. ஆகவே இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாது என்று கையை விரித்து டாடா சொல்லி விட்டது.
இதனை அடுத்து மற்றொரு வங்கியான சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு மூலதன வங்கியை (Asian Infrastructure Investment Bank-AIIB) அனுகியபோது அதுவும் அமராவதி நகர் உருவாக்கத் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டது.
இது பற்றி விளக்கமளித்த ஏஐஐபி (AIIB) வங்கியின் செய்தித் தொடர்பாளரான லாரல் ஆஸ்ட்ஃபீல்ட் (Laurel Ostfield) அமராவதி நகருக்கான உள்கட்டமைப்பு மற்றும் நிதி மேம்பாட்டுக்கான திட்டத்தை பரிசீலிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அமராவதி நகரை கட்டமைக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.