பிரிட்டன்: சில தினங்களுக்கு முன்பு தான் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். அவரைப் பற்றிய விமர்சனங்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான ஒப்பீடுகள் எல்லாம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க தற்போது கேபினெட் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி இருக்கினறது.
இந்த புதிய இங்கிலாந்து கேபினெட் அமைச்சர்களில் மூன்று பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரிதி படேல், அலோக் சர்மா, Infosys நாராயண மூர்த்தி மருமகன் ரிஷி சுனக் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி எம்பிக்களும் இப்போது அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.
இங்கிலாந்து வரலாற்றிலேயே, போரிஸ் ஜான்சனின் கேபினெட் அமைச்சரவை தான், பன்முகத் தன்மை கொண்ட, பல இனத்தவர்களைக் கொண்ட கேபினெட் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ப்ரிதி படேல்
இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டுமா என்ன..? வழக்கம் போல உள்நாட்டு பாதுகாப்பு, குற்றமங்களைச் சமாளித்தல், தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொள்வது, சட்டத்துக்கு முரணாக குடியேறுபவர்களைச் சமாளிப்பது என பல முக்கிய விவகாரங்கள் இவருக்குக் கீழ் தான் வரப் போகின்றன. இப்போது நீரவ் மோடியை இந்தியாவுக்கு பார்சல் செய்வதா..? வேண்டாமா..? என்பதைக் கூட ப்ரிதி படேல் தான் முடிவு செய்வார். இந்த 47 வயது இந்திய பெண்மணி எதிர்காலத்தில் பிரதமர் கூட ஆகலாம் என ஆரூடம் சொல்கிறார்கள்.
அலோக் சர்மா
இவர் முன்னாள் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக பணியாற்றியவர். இப்போது வெளி விவகார மேம்பாடு (International Development)அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர் 2010 முதல் இங்கிலாந்தின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் ஒரு தேர்ந்த பட்டையக் கணக்காளர் (Chartered Accountant). டிலாய்ட்டி ஹாஸ்கின்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 16 ஆண்டுகள் வங்கித் துறையில் பணி அனுபவம் கொண்டவர். இவர் தாஜ் மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்
இந்திய பில்லியனர் என் ஆர் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை இவர் தான். இவர் தற்போது இங்கிலாந்து கருவூலத்தின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கேபினெட் கூட்டங்களில் பங்கெடுப்பார் எனச் சொல்லி இருக்கிறார்கள். இவர் ஒரு முதலீட்டு நிதிசார் தொழில்முனைவோர் (investment fund entrepreneur). இந்த துறையிலேயே ஒரு குட்டி மில்லியனராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு வழங்கப்பட்டிருக்கு பதவி, இங்கிலாந்து கருவூலத்திலேயே 3-வது பெரிய பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய ஆட்கள்
முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட், முன்னாள் சர்வதேச வர்த்தகத் துறை ச் செயலர் லியாம் ஃபாக்ஸ் ஆகியொர்களுக்கு மீண்டும் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்-க்கு இங்கிலாந்து கருவூலத்தின் இரண்டாவது பெரிய பதவியான கருவூல வேந்தர் (Chancellor of the Exchequer) பதவி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.