டெல்லி: வர்த்தக ரீதியாக பிற நாடுகளின் 239 செயற்கை கோள்கை இந்தியாவில் இருந்து ஏவியதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசுக்கு சுமார் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக நேற்று லோக்சபாவில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவின் திறமையைக் கண்டு வியந்த மற்ற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இந்தியாவின் துணையை நாடத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் இந்தியா வர்த்தக ரீதியில் அனுப்பி வருகிறது.
லோக்சபாவில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திரா சிங், பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியிலான செலுத்துவதற்காகவே தனியாக நிறுவனம் தொடங்கப்பட்டு விண்வெளித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடுகளின் சாதனை
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ராக்கெட்டுகளையும், செயற்கைக் கோள்கையும் விண்வெளிக்கு அனுப்புத் தொடங்கி இருந்தன. 1957ஆம் ஆண்டில் ரஷ்யா முதன் முதலில் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 1969ஆம் ஆண்டில் அமெரிக்காவும் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பி சாதனை படைத்து காலரை தூக்கிவிட்டுக் கொண்டது.
நிலா நிலா ஒடிவா
இந்தியாவிலோ அதற்கு நேர் மாறாக, அப்போதுதான் குழந்தைகளுக்கு நிலவைக் நிலா நிலா ஓடிவா என்று கதை சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போதைய இளைஞர்களின் மனதில் நாம் எப்பொழுது அமெரிக்கா, ரஷ்யா போல் விண்வெளிக்கு ராக்கெட், செயற்கை கோள்களை அனுப்புவோமோ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organization-ISRO) ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் ஆரியபட்டா
ஒரு வழியாக இஸ்ரோ ஆய்வு மையத்தை தொடங்கி முதன் முதலில் கடந்த 1975ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா அப்போதைய சோவியத் யூனியனில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. பின்பு 1979ஆம் ஆண்டில் பாஸ்கரா மற்றும், 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளும் சோவியத் யூனியனில் இருந்து அனுப்பட்டது.
மாட்டு வண்டிப் பயணம்
இதேபோல், கடந்த 1981ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் (Ariane Passenger PayLoad Experiment) பரிசோதனை செய்வதற்காக 150 ரூபாய் கொடுத்து மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் ராக்கெட்டுகளையும், செயற்கைக் கோள்களையும் இந்தியா விஞ்ஞானிகளே உருவாக்கி இருந்தாலும், அவற்றை ஏவுவதற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளின் தயவையே நாடவேண்டிய நிலை இருந்து வந்தது. இதற்க முக்கிய காரணம், இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலை நாடுகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் பின்தங்கியிருந்ததே.
தொழில்நுட்பத்துறை வளர்ச்சி
கடந்த 1990ஆம் ஆண்டகளில் உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்திய சந்தைகள் திறந்துவிடப்பட்டதை அடுத்து இந்தியாவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து. நம் நாட்டிலேயே சொந்தமாக செயற்கை கோளையும் தயாரித்து அதை ஏவுவதற்கான ராக்கெட்டையும் தயாரிக்கும் திறமையை வளர்த்துகொண்டது என்று சொல்லலாம்.
நாங்களும் அனுப்புவோம்
இந்தியாவின் ராக்கெட், செயற்கைக் கோள் உருவாக்கம் மற்றும் ஏவும் திறமை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருவதைக் கண்ட மற்ற நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்க ஆரம்பித்தன. குறிப்பாக மிகக்குறைந்த செலவில் ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்துவதைப் பார்த்த வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆச்சரியப்பட்டன. ஒருகாலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள்களை வல்லரசு நாடுகளின் துணையோடு அனுப்பி வந்த இந்தியா, தொழில்நுட்பத் துறையில் அபார திறமையும் வளர்ச்சியும் பெற்று நம் நாட்டிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பி மற்ற நாடுகளை ஆச்சரியப்படுத்தியது.
வர்த்தக செயற்கைக்கோள்கள்
ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், என்று ஒரு சொலவடை உண்டு. இந்தியாவின் திறமையைக் கண்டு வியந்த மற்ற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இந்தியாவின் துணையை நாடத் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் இந்தியா வர்த்தக ரீதியில் அனுப்பி வருகிறது.
மங்கள்யானுக்கோ 450 கோடி தான்
மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் செயற்கைக் கோள்களை இந்தியாவிலிருந்து அனுப்புவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்திய சொந்த முயற்சியில் செயற்கைக் கோளை உருவாக்கி அனுப்புவதற்கு ஆன மொத்த செலவு சுமார் 454 கோடி ரூபாய். ஆனால் அதே காலகட்டத்தில் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அவதார் படத்திற்கு சுமார் 1500 கோடி ரூபாய் செலவானது குறிப்பிடத்தக்கது. எனவேதான் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு மற்ற நாடுகள் இந்தியாவை நாடத் தொடங்கியது எனலாம்.
கல்லா கட்டும் இஸ்ரோ
வர்த்தக ரீதியில் முதலில் ஒன்று, இரண்டு செயற்கைக் கோள்களையே விண்ணுக்கு அனுப்பி வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சந்று அலுப்பு தட்டியதால் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தத் தொடங்கியது எனலாம். அதிக அளவிலான செயற்கைக் கோள்களை அனுப்புவதால் அதிக அளவில் வருமானமும் பெருகியதால், அதிக எண்ணிக்கையிலான செயற்கைக் கோள்களை அனுப்புவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.
ஒரே தடவை 107 செயற்கைக்கோள்கள்
இதனையடுத்து, 2013ஆம் ஆண்டில் 20 செயற்கைக் கோள்களையும், 2017ஆம் ஆண்டில் 37 செயற்கைக் கோள்களையும் அனுப்பியும் திருப்தியடையாத இஸ்ரோ ஒரே தடவையில் 107 செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை படைத்து. இவ்வாறாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே இந்தியா மற்ற நாடுகளின் 239 செயற்கைக் கோள்களை அனுப்பி கல்லா கட்டியது. மூன்று ஆண்டுகளில் மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களை அனுப்பிய வகையில் சுமார் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
விண்வெளித்துறை
வர்த்தக ரீதியிலான செயற்கைக் கோள்களை அனுப்புவதற்காகவே இஸ்ரோ நிறுவனம் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited-NSIL) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு ஆகிய இரண்டும் விண்வெளித்துறையின் (Department of Space-DOS) வசம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை வணிக ரீதியில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விண்வெளித்துறையே கவனித்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருமானம் ரூ.6289 கோடி
வர்த்தக ரீதியிலான செயற்கைக் கோள்களை அனுப்பிய வகையில் எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதம மந்திரியின் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்