காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் மட்டும் அல்லாது, பல வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி பக்தர்கள் இங்கு குவிந்து வருகிறார்கள்.
அதிலும் சாதாரண நாட்களில் சுமார் 1.5 லட்சம் பக்தர்களும், விடுமுறை நாட்களில் 2.5 லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 750 சக்கர நாற்காலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது மேலும் 500 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாம்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழல் பந்தலும், பல ஆயிரம் பேர் இளைப்பாறிச் செல்லும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 22 நாளில் இதுவரை சுமார் 30.5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்களாம். இதோடு அத்திவரதர் விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 10 உண்டியல்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் கூறுகையில், கடந்த 22 நாட்களாக கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களில் இருந்து மொத்தம் ரூ.1.28 கோடி வசூலாகி உள்ளது.
இதோடு 42 கிராம் தங்கம், 457 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது. இதோடு தொடர்ந்து உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, பணம் எண்ணப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் வருகிற ஆகஸ்டு 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார், அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் போது பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்க உள்ள நிலையில் இனி வரும் வாரங்களில் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க இருப்பதால், பக்தர்கள் தரிசனத்திற்கு இன்னும் அதிகமாக வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.