சேலம் : இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பொருளாதார நிலையில் ஆண் பெண் இருவருமே வேலை சென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஆக ஆண்கள் பெண்கள் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சரியான நேரத்தில் சமைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு செல்ல முடியாது.
ஆனால் வீட்டிலேயே இருந்து கொண்டு, சொந்தமாக யாரும் கேள்வி கேள்வி கேட்காதவாறு, நாம் 10 பேருக்கு வேலை கொடுக்க முடியும் என்கிறார் சேலத்தை சேர்ந்த கவிதா அக்கா.
ஆமாங்க.. கவிதா அக்காவின் கணவரும், அக்காவுக்கு துணையாகவே உதவி செய்து வருகிறார். கவிதா அக்கா படித்தது 6ம் வகுப்பு வரை என்றாலும் தனது தொழிலில் பலே கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும். இல்லை எனில் 12 வருடமாக தனது தொழிலில் கொடி கட்டிக் பறக்க முடியுமா?
அடுத்து என்ன செய்யலாம்?
ஒரு காலத்தில் மற்ற பெண்களை போலவே நானும் வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டோடு தான் கணவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒருவரின் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்துவது மிக கடினமாக இருந்தது. இதனால் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதில் தோன்றியது தான் இந்த குழம்புக் கடை. எனக்கு தெரிந்ததை வைத்து ஆரம்பத்தில் வீட்டிலிருந்து செய்தேன். நல்ல வரவேற்பு இருந்தது.
ஆரம்பத்தில் தோழிகளுடன் ஆரம்பித்தது
ஆரம்பத்தில் நானும் என் இரண்டு தோழிகளும் சேர்ந்து சிறு கடையாக ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு இருக்கவே இன்று இந்த அளவு வளர்ந்து இன்று ஸ்ரீ லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. எங்களது கடை சேலம் நரசிம்மபுரம் குகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ளது என்கிறார் கவிதா. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இங்கு வேலை செய்யும் அனைவரும் பெண்கள் தானாம். இது குறித்து இந்த கடைக் உரிமையாளாரான கவிதா கூறுகையில், நானும் வீட்டிலிருந்து வேலை செய்வதோடு, என்னைப் போன்ற பெண்களுக்கும் வேலை கொடுப்பது மிக மகிழ்ச்சி அழிக்கிறது என்கிறார்.
என்னென்ன வகை?
இங்கு வீட்டில் வைக்கும் ரசம், சாம்பார், குழம்பு வகைகள், பொரியல், சைடு டிஷ் ஆக வடை உள்ளிட்ட அனைத்தும் செய்யப்படுகிறது. இங்கு ஸ்பெஷலே சுண்டல் குழம்பு, அவரை கொட்டை என்கிற மொச்சை கொட்டை குழம்பு தான். அதிலும் சேலத்தில் முக்கிய உணவாக கருதப்படுகம் மொச்சை கொட்டை குழம்பு தான் ரொம்ப ஸ்பெஷலாம். இது எப்போதும் இங்கு கிடைக்கும் என்கிறார்கள். கவிதா அக்காவும் அவரது கணவர் பாலகிருஷ்ணனும். இதே போல அசைவ உணவுகளும் இங்கு ரொம்ப பேமஸ் என்றாலும், இங்கு கிடைக்கும் சிக்கன் கிரேவி தான் மிக பேமஸ் என்றும் கூறுகிறார்கள்.
வாடிக்கையாளர்?
பொதுவாக பேச்சிலர்களுக்கு இது போன்ற கடைகள் சொர்கம் என்றால், சேலத்தில் இவர்களின் கடைக்கு பெண்களே அதிகம் வருகிறார்களாம். ஏனெனில் கணவன் மனைவி இருவரும் அதிகம் வேலைக்கு செல்லு இக்கால கட்டத்தில் வீட்டில் சமைக்க நேரம் இருக்காது. இதனால் வெறும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு 20 ரூபாய்க்கு குழம்பு வாங்கிக் கொண்டு போனால் போதும், அதை வைத்து குடும்பமே சாப்பிட்டு கொள்ளலாம் என்று கூறுகிறார் கவிதா.
இதுதவிர வேறென்ன சர்வீசஸ்?
வெறும் 10 ரூபாயிலிருந்து இருக்கிறதாம், 50 ரூபாய்க்கு வாங்கினாலே ஒரு குடும்பமே அமர்ந்து நிம்மதியாக சாப்பிடலாம். ஆரம்பத்தில் வெறும் குழம்பு மட்டுமே விற்பனை செய்து வந்த இந்த கடையின் பேர் வெளியே ஆரம்பித்த பின்னர் தற்போது கல்யாணம், சீமந்தம், புதுமை புகுவிழா என அனைத்து விஷேங்களுக்கும், ஆர்டரின் பேரில் இங்கிருந்து சமைத்துக் கொடுக்கிறோம் என்கிறார்கள் இந்த சேலத்துத்து தம்பதி.
வேலை நேரம் எப்படி?
காலை 7.30 மணிக்கெல்லாம் ஆரம்பிக்கும் இவர்களின் கடையில், டிபன் வகைகளும் கிடைக்கும். குறிப்பாக இட்லி தோசை, பொங்கல், பூரி என கலக்கும் இவர்கள், மாலை வேளையிலும் இட்லி தோசை, பணியாரம், ராகி சேமியா, கிச்சடி, சப்பாத்தி என அனைத்தும் விற்பனை செய்கிறார்கள். இது தவிர வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்சத்தில் சில்லி, சோயா பீன்ஸ் சுக்கா, சேனைக்கிழங்கு சுக்கா என அனைத்தும் கலக்குவார்களாம். ஆமாங்க.. கவிதா அக்காவின் கடையில் சேனைக்கிழங்கு சுக்கா என்றால் அப்படியொரு பேமஸாம்.
தற்போது அசைவம் இல்லை?
கடந்த 3 மாதங்களாகவே அசைவ உணவை நிறுத்தி வைத்திருந்தாலும், தற்போது ஆடி மாதம் என்பதால், அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கூறுகிறார். ஆமாங்க.. கவிதா அக்கா கடையில் சிக்கன் கிரேவி இல்லாமல் இந்த ஊர் இளைஞர்கள் தவிக்கிறார்கள் என்றால் பாருங்களேன். அந்த அளவுக்கு ருசியும் தரமும் உண்டாம்.
யூடியூப் பேமஸ் ஆன கவிதா அக்கா
ஆமாங்க.. சில மாதங்களுக்கு முன்பு யூடியூப்பில் மிக பேமஸ் ஆன கவிதா அக்காவை சென்னையிலும், பெங்களுரிலும், இப்படியொரு கிளையை ஆரம்பிக்க சொல்கிறார்களாம் நம்ம யூத்ஸ். அதிகளவு பேச்சிலர்கள் இருக்கும் சென்னையில் கவிதா அக்காவின் குழம்புக்கு, அதிகம் பேர் யூடியூம்பில் பேன்ஸ் என்றால் பாருங்களேன். அதிலும் சென்னையில் இப்படியொரு கிளையை ஆரம்பிக்க கவிதாவுக்கு நிறைய பேர் கேட்டிருக்கிறார்களாம்.
சரி வருமானம் எப்படி?
வருமானம் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை என்றும் கூறும் கவிதா அக்கா, இந்தக் கடை வைத்திருப்பதே வாடகை கடையில் தான். 10க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம், மூலப்பொருட்களின் விலைவாசி என பட்டியிட்டு பார்த்தால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும், நாமும் ஏதோ சம்பாதிக்கிறோம். நம்மால் 10 குடும்பங்களுக்கு ஏதோ உதவி செய்ய முடிகிறது என்ற திருப்தி என்று கூறுகிறார்.
எதையும் செய்ய முடியும்?
சென்னை போன்று வளர்ந்து வரும் நகரங்களில், பேச்சிலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆங்காங்கே இது போன்ற கடைகள் முளைக்க தொடங்கினாலும், பெண்க ல்வீட்டிலிருந்து கொண்டே, தன்னாலும் எதுவும் செய்ய முடியும் என்பது கவிதா அக்காவே ஒரு உதாரணம். ஆமாங்க படிப்பு ஒரு காரணம் இல்லை, உழைப்பு மட்டும் இருந்தாலே போதும் முன்னேறலாம் என்கிறார் கவிதா!