ஜெய்ப்பூர்: ஸ்நாப்டீல் நிறுவனம் ஏற்கனவே பலமுறை போலியான மொபைல் ஃபோன்களை டெலிவரி செய்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போலியான பொருட்களை டெரிவரி செய்து பிரச்சனையில் சிக்கியுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த உட்லண்ட் பெல்ட் மற்றும் பர்ஸ்க்கு பதிலாக தரம் குறைந்த மிகவும் மலிவான பொருட்களை டெலிவரி செய்ததாக பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவன தலைவர்களான குணால் பால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980 மற்றும் 90ஆம் ஆண்டுகளில், நாளிதழ்களில் பரவலாக விளம்பரம் வெளியிட்டு ஏமாற்றுவதுண்டு. அதிக விலையுள்ள வாட்ச், அமெரிக்கன் டைமண்ட் நெக்லஸ், ரேடியோ போன்ற பொருட்களை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்கிறோம், முன்பணம் தேவையில்லை, பொருட்களை வாங்கும்போது அதற்கான விலையை கொடுத்துவிட்டு பொருட்களை டெலிவரி வாங்கிக் கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்வதுண்டு.
பட்டை நாமம்
பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு பார்சலை பிரித்துப் பார்த்தால், அதில் மிக மட்டரகமான பொருளோ அல்லது வெறும் செங்கல் இருக்கும். வாங்கிய நமக்கு பட்டை நாமம்தான். தற்சமயம் அதே பாணியை ஆன்லைனில் பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்நாப்டீல் நிறுவனமும் பின்பற்றி வருவது போல் தான் தெரிகிறது.
ஆன்லைன் ஆர்டர்
ராஜஸ்தான் மாநிலத்திலுள் குமன்புரா (Gumanpura) மாவட்டத்திலுள்ள கொட்ட (Kota) என்ற இடத்தைச் சேர்ந்த இந்தர்மோகன் சிங் ஹனி (Indermohan Singh Honey) என்ற தொழிலதிபர், கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீலில் தனக்கு விருப்பமான உட்லண்ட் பெல்ட் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை டிக்செய்து அதற்கான பணத்தையும் ஆன்லைனில் உடனடியாக செலுத்திவிட்டு டெலிவரிக்காக காத்திருந்தார்.
போலியான பொருட்கள்
கடந்த வாரம் அந்த பார்சலும் வந்தது. வந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்தவருக்கு இது டூப்ளிகேட்டாக இருக்குமோ என்று லேசாக சந்தேகம் எழுந்தது. தன்னுடைய சந்தேகம் உண்மையா இல்லையா என்பதை அறிய உடனடியாக பக்கத்திலுள்ள உட்லண்ட் ஷோரூமுக்கு சென்று அந்த பார்சலை கொடுத்து பரிசோதிக்க சொன்னார். அங்கிருந்த ஊழியர் பெல்ட்டையும் பர்ஸையும் பரிசோதித்து பார்த்துவிட்டு, சார் இது நிச்சயம் டூப்ளிகேட் சரக்கு தான் சார் என்று உறுதியளித்திருக்கிறார்.
போலீசில் புகார்
தான் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக ஸ்நாப்டீல் நிறுவனம், போலியான பொருட்களை அனுப்பியதை அறிந்த உடனே கடுப்பான இந்தர்மோகன், உடனடியாக குமன்புரா நகர காவல் நிலையத்தில் ஸ்நாப்டீல் உரிமையாளர்களான குணால் பல் (Kunal Bahl) மற்றும் ரோஹித் பன்சால் (Rohit Bansal) ஆகியோர் மீது தன்னை ஏமாற்றிவிட்டதாக சட்டப்பிரிவு 420யின் கீழ் புகார் அளித்தார்.
ஸ்நாப்டீல் மீது புகார்
இதையடுத்து ஸ்நாப்டீல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை முதன்மை அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த இந்தர்மோகன், தான் ஏற்கனவே இதுபோல் கைக்கடிகாரத்தை ஆர்டர் செய்தபோதும் இதே போல் போலியான கைக்கடிகாரத்தை அனுப்பி ஸ்நாப்டீல் நிறுவனம் தன்னை ஏமாற்றியதாக வருத்தத்துடன் கூறினார் (இவர் அந்த பகுதியில் பிரபலமான காங்கிரஸ் பிரமுகராம்). இந்த முறையும் அதேபோல் நடந்துள்ளதால் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏமாற்றும் ஸ்நாப்டீல்
ஸ்நாப்டீல் நிறுவனம் போலியான பொருட்களை டெலிவரி செய்வது இது முதல் முறை கிடையாது. தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களை அடிக்கடி இந்நிறுவனம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன்களை ஆர்டர் செய்தால், அதற்கு பதிலாக மிகவும் மலிவான, மட்டரகமான ஃபோன்களை டெலிவரி செய்து மாட்டிக்கொண்டு, அபராதமும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.