சென்னை: சென்னை- மதுரை இடையே ஓடிக்கொண்டிருக்கும் தேஜாஸ் ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் பல தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டே ரயில்வே துறையில் தனியார் முதலீடு குறித்தும், வேறு பல சேவைகள் குறித்தும் ஆராய பிபேக் தேப்ராய் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
பிபேக் தேப்ராய் குழுவினரின் அறிக்கையில் ரயில்வேத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது, வணிக ரீதியிலான ரயில்களை தனியார் இயக்க அனுமதிப்பது என்று கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ரயில்வேயில் தனியார் முதலீட்டை அனுமதிப்பதன் முதற்கட்டமாக தேஜாஸ் ரயில்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளன.
தனியார்மயம்
டெல்லி லக்னோ இடையிலான தேஜாஸ் ரயிலை தனியார்மயமாக்க மத்திய அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மதுரை இடையிலான தேஜாஸ் ரயில், மற்றும் சென்னை - கோவை இடையிலான ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை தனியார் மயமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடும் பாதிப்பு
இப்படி பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்ற, லாபமீட்டும் ரயில்களை தனியார் மயமாக்கும் பட்சத்தில் ரயில்வேயின் வருவாய் பாதிக்கப்பட்டு, அந்த துறை இழப்பை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட ஒரு சூழல் வரும்போது அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்படும். இது ஒருபுறம் என்றால் இந்த ரயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அபாயம்
இப்போதே சில ரயில்களில் பயணிகளின் அவசரத்தை பயன்படுத்தி டைனமிக் கட்டணங்கள் வசூலிக்க்கப்படுகின்றன. இது தனியார்மயக்கப் படும் பட்சத்தில் விமானக் கட்டணங்களுக்கு சமமாக உயரும் அபாயம் உண்டு.
மானியம் ரத்து
முதற்கட்டமாக தேஜாஸ் ரயில்களும் பின்னர் அதிகப்படியான பயணிகள் பயன்படுத்தும் ரயில்களையும் தனியாருக்கு விடுவதன் மூலமாக பயணிகள் இருமடங்கு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப் படுவார்கள். தனியார் மயமாக்கப்படுகையில் இதுவரை அரசு கொடுத்து வந்த மானியத்தை அரசு ரத்து செய்துவிடும்.
தொழிற்சங்கங்கள்
மோடியின் கடந்த ஆட்சியிலேயே ரயில்வே தொழிற்சங்கங்கள் ரயில்வேயில் தனியார் பங்களிப்பை எதிர்த்து கடுமையாக போராட்டங்கள் நடத்தின. இப்போதும் இது போன்ற ஆலோசனைகள் நடைமுறைப் படுத்தப் பட்டால் இங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இறுதி முடிவு
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இரு ரயில்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளன. அதில் மதுரை சென்னை இடையிலான தேஜாஸ், மற்றும் சென்னை - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.