டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்தி நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மேலும் சுமார் 25 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக விமான போக்குவரத்து ஆணைய தலைவர் குருபிரசாத் மொகபத்ரா தெரிவித்தார்.
விமான நிலைய பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 விமான நிலையங்களை பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானியின் நிறுவனத்திற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான போக்குவரத்து ஆணையமே பராமரித்து நிர்வகிப்பது என்பது பெரும் சவாலாகவும் சுமையாகவும் இருப்பதாக ஆரம்பம் முதலே மத்திய அரசு எண்ணிக்கொண்டு இருந்தது.
இந்தியாவைப் பொருத்த வரையில் எந்த ஒரு அமைப்போ, அரசு அலுவலகமோ அல்லது மருத்துவமனையோ அரசின் வசம் இருப்பதை விட தனியார் வசம் இருந்தால் தான் உருப்படும், தரத்திற்கும் உத்தரவாதம், கூடவே வேலையும் நன்றாக நடக்கும் என்ற உருப்படாத எண்ணம் தொடக்கம் முதலே அனைவருக்கும் இருந்து வருகிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப பொதுமக்களின் மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிப்பது போலத்தான் அரசின் வசம் இருக்கும் அனைத்து அமைப்புகளின் நடவடிக்கையும் உள்ளன. அதற்கு ஒரு உதாரணம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பராமரிப்பு. சென்னை விமான நிலைய மேற்கூறையின் கண்ணாடிகள் அவ்வப்போது கீழே விழுந்து உடைகின்றன. (ஒரு வேளை அங்கன மட்டும் புவி ஈர்ப்பு விசை ரொம்ப ஜாஸ்தியோ). இதற்கு என்ன காரணம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்பது ஆச்சரியம்தான்.
இதன் காரணமாகவோ என்னவோ மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்து காய் நகர்த்தி வருகிறது. முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அஹமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை மோடியின் நண்பரான அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக மேலும் 20 முதல் 25 விமான நிலையங்களையும் பாராமரித்து மேம்படுத்தி நிர்வகிக்கும் பொறுப்பையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இது பற்றி விளக்கமளித்த விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகபத்ரா (Guruprasad Mohapatra), கடந்த பிப்ரவரியில் 6 சிறிய விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைத்தோம். அடுத்த கட்டமாக மேலும் 20 முதல் 25 விமான நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம், என்று கூறினார்.
இரண்டாம் கட்டமாக ஒப்படைக்கப் போகும் விமான நிலையங்கள் அனைத்தும் சர்வதேச விமான நிலையங்களாகும். இவ்விமான நிலையங்களில் வந்து போகும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு சுமார் 15 லட்சம் ஆகும் என்றும் அவர் கூறினார்.