டெல்லி: மத்திய அரசு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து, மரபு சார் பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் மாசுபாட்டைக் குறைக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறதாம்.
மத்திய மோட்டார் வாகன சட்டப் படி, இனி 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதனை செய்து (Fitness Certificate) சான்று வழங்கப் போவதாக ஒரு வரைவுச் சட்டத்தை முன் மொழிந்திருக்கிறார்களாம். தற்போது 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து (Fitness Certificate) சான்று வாங்கினால் போதுமானதாக இருக்கிறது.
மிக முக்கியமாக 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களை, சோதனை செய்து (Fitness Certificate)சான்று வாங்குவதற்கான கட்டணத்தையும் பயங்கரமாக அதிகரிக்க இருக்கிறார்களாம். மேனுவல் ரக மோட்டார் வாகனங்களுக்கு 1,200 ரூபாய் வரையும், ஆட்டோமேட்டிக் மற்றும் கண ரக வாகனங்களுக்கு 2,000 ரூபாய் வரையும் வசூலிக்க இருக்கிறார்களாம்.
இந்த புதிய மத்திய மோட்டார் வாகன விதிகள் சட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முன் மொழிந்திருக்கிறது. இந்த சட்டப் படி 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களை அப்படியே கைவிட்டு காய்லாங்கடைக்கு போட வைக்க சட்டத்தில் வழி வகை செய்திருக்கிறார்களாம்.
அதோடு தங்கள் பழைய வாகனங்களை முழுமையாக அழித்தொழித்த (Scrap) ஸ்கிராப் செய்த சான்றிதழைக் காட்டினால் புதிய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் சொல்லி இருக்கிறார்களாம். நடுத்தர, கண ரக, பயணிகள் வாகனங்களை புதிதாக பதிவு செய்ய 20,000 ரூபாய் என விலை நிர்ணயிக்க இருக்கிறார்களாம். இந்த வாகனப் பதிவுகளை புதுப்பிக்க 40,000 ரூபாய் என நிர்ணயிக்க இருக்கிறார்களாம்.
அதே போல இறக்குமதி செய்யப்படும் (நான்கு சக்கரங்கள் அல்லது அதற்கு மேல் சக்கரங்களைக் கொண்ட) வாகனங்களைப் பதிவு செய்ய 20,000 ரூபாய் மற்றும் அதே வாகனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்க 40,000 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்களாம். எப்படியாவது மிகக் குறைவான காலத்தில் பழைய பெட்ரோல் டீசல் ரக வாகனங்களை எல்லாம் பரணில் போட்டு விட்டு திடுதிப்பென மின்சார வாகனங்களை அதி விரைவாக புழக்கத்துக்கு கொண்டு வர அரசு பகிரங்கமாக முயற்சிப்பதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தற்போது இந்த வரைவுச் சட்டத்தைக் குறித்து கருத்து சொல்ல, மத்திய அரசு கால அவகாசம் கொடுத்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.