டெல்லி: முன்னாள் நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் விருப்ப ஓய்வுக்கு (Voluntary Retirement Service) விண்ணப்பித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தான் நிதி அமைச்சகத்தில் இருந்து மின்சார அமைச்சகத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுபாஷ் சந்திர கார்கின் நிதிச் செயலர் மற்றும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சகத்தின் பொறுப்பை அதானு சக்கரபர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சகத்தில் சுபாஷ் சந்திர கார்க்குக்கு கொடுத்த பிரிவு உபச்சார விழாவில் தான் விருப்ப ஓய்வைப் பற்றிப் பேசி இருக்கிறாராம்.
இவருடைய விருப்ப ஓய்வை அரசு ஏற்றாலும் கூட மூன்று மாத கெடு காலத்தைக் (Notice Period) கழிக்க வேண்டி இருக்கும் எனவும் சொல்கிறார்கள். இந்த 3 மாத காலத்தில் விடுப்பு எடுத்து பணிகளில் இருந்து விலகி இருக்கப் போகிறாரா அல்லது மின்சார அமைச்சகத்தில் செயலர் பணியை ஏற்று தன் வேலையைச் செய்யப் போகிறாரா என்பது குறித்தும் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏன் பணிமாற்றம்
இத்தனை நாள் மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்த சுபாஷ் சந்திர கார்க் ஏன் திடீரென மத்திய அரசால் நிதி அமைச்சகத்தை விட குறைந்த அதிகாரத்தைக் கொண்ட மின்சார அமைச்சகத்துக்கு ஏன் பணிமாற்றப்பட வேண்டும்..?
காரணம் இல்லாமலா..? முன்னாள் ஆர்பிஐ வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான Economic Capital Framework (ECF)கமிட்டியின் முடிவை சுபாஷ் சந்திர கார்க் ஆதரிக்கவில்லை. பொருளாதார விவகாரத் துறைச் செயலர் (சுபாஷ் சந்திர கார்கின்) கையெழுத்து இல்லாமல், அறிக்கையை ஆர்பிஐ-யிடம் சமர்பிக்க முடியாது. ஆகையால் தான் சுபாஷ் சந்திர கார்க் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
என்ன சொல்கிறது
அப்படி Economic Capital Framework (ECF) கமிட்டி என்ன சொல்கிறது..? ஆர்பிஐ வங்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணங்களில் ஒரு குறைந்தபட்ச ரிசர்வ் தொகையை, மத்திய அரசுக்கு கொடுக்கலாமா..? என ஆலோசித்துச் சொல்ல வேண்டியது தான் இந்த கமிட்டியின் பொறுப்பு. இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் அனைவரும் (சுபாஷ் சந்திர கார்க் தவிர), அரசுக்கு ஆர்பிஐ ஒரு குறைந்தபட்சத் தொகையைக் கொடுக்கலாம் என ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதோடு ஆர்பிஐ தன் ரிசர்வ் தொகையில் எவ்வளவு தொகையைக் கொடுக்கலாம், அந்த தொகையை எப்படிக் கணக்கிடுவது எனவும் ஒரு சூத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டில்
இது தவறு என கையெழுத்து போட மறுத்திருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க். அதோடு ஆர்பிஐ மத்தியக் குழுவிடம் இந்த பிரச்னையைப் பற்றி பேசிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறாராம். Economic Capital Framework (ECF)கமிட்டி அறிக்கை தங்களுக்கு சாதகமாக வரும் என்கிற நம்பிக்கையில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் சுமார் 23,000 கோடி ரூபாயாக இருந்த ஆர்பிஐ ஈவுத் தொகை கணிப்பு, ஜூலை 05, 2019-ல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்பு இல்லை
சுபாஷ் சந்திர கார்கின் எதிர்ப்பு, மேலிடத்துக்கு தெரிய வர, பணிமாற்றம் கொடுத்து வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். சுபாஷ் சந்திர கார்க்கின் பணி மாற்றத்துக்கும், நிதி அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்லி இருக்கிறது நிர்மலா சீதாராமன் கீழ் இயங்கும் நிதி அமைச்சகம். இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா..? இதே சுபாஷ் சந்திர கார்க் தான் ஆர்பிஐயிடம் பேசி இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியை அமைத்தவர். இப்போது அவர் அமைத்த கமிட்டியின் அறிக்கையிலேயே, அவர் கையெழுத்து போடாமல் பதவி விலகி இருப்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்து வந்த பாதை
1983-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்தவர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றினார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் நம் சுபாஷ் சந்திர கார்க்குக்கு முதன் முதலாக மத்திய அரசில், 2000-ம் ஆண்டில் பொருளாதார விவகாரத் துறையில் பதவி கிடைத்தது. 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனேயே மீண்டும் தன் ராஜஸ்தான் மாநிலத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 2009-ல் மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தில் பதவி பெற்றார். காங்கிரஸ் ஆட்சி முடிவில் 2013-ம் ஆண்டில் மீண்டும் ராஜஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
இரண்டாம் ஆட்டம்
மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் வந்த உடன் செப்டம்பர் 2014-ல் நிதி அமைச்சகத்தின் கீழ் பதவி பெற்றார். 2017-ல் பொருளாதார விவகாரத் துறைச் செயலராக பதவி வகித்தார். இப்போது ஓய்வு பெறும் முன் மின்சார அமைச்சகத்தின் செயலராக பதவியில் இருக்கிறார். ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலைத் தான் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைத்து, தன் காரியத்தை சாதித்துக் கொண்டது. இப்போது மத்திய அரசு எதிர்பார்ப்பதைச் செய்யவில்லை என்பதற்காக சுபாஷ் சந்திர கார்க்கை பணிமாற்றம் செய்திருப்பதையும் ஆர்பிஐ மீதும், ஆர்பிஐ வைத்திருக்கு பல லட்சம் கோடி ரிசர்வ் பணத்தைப் பெறும் வேலையிலும் மத்திய அரசுக்கு இருக்கும் வேகம் தெரிகிறது.