அகமதாபாத்: பால் மற்றும் அதன் துணைப்பொருட்களின் உற்பத்தி செய்யும் அமுல் நிறுவனம் தற்போது புதிதாக பிஸ்கெட் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இது மற்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ள போதிலும், அமுல் நிறுவனத்தின் விளம்பர யுத்தி மற்ற நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே போன்றவை தயாரிக்கும் பிஸ்ட்டுகளில் வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா அல்லது காய்கறி எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை அந்த விளம்பரம் எழுப்பியுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அமுல் நிறுவனத்தின் பட்டர் பிஸ்கெட்டுடன் மற்ற நிறுவன பிஸ்ட்டுகளை ஒப்பிடும்போது, அமுல் பிஸ்கெட்டுகளின் விலை 2 மடங்கு அதிகம்தான். 40 கிராம் எடையுள்ள அமுல் பிஸ்கெட் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் என்றால் பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டின் விலை ரூ.5 மட்டுமே.
உள்ள என்ன இருக்கு
இன்றைய நவீன உலகத்தில் நிற்பதற்கு கூட நேரமில்லாமல் கால்களில் றெக்கை கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் அவசர அவசரமாக உண்ணும் உணவைக் கூடி காக்கா கடியாக கடித்து விழுங்கி விட்டுப் போகிறோம். நாம் உண்ணும் உணவில் எந்த மாதிரியான பொருட்கள் கலந்திருக்கின்றன, அதில் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கிறதா, அப்படி இருந்தால் அது அனுமதிக்கப்பட்ட அளவில் தான் உள்ளதா என்று எதையும் பார்க்காமலேயே அப்படியே விழுங்கிவிட்டு செல்கிறோம். அது பிஸ்கெட்டாக இருந்தாலும் சரி அல்லது பிரியாணியாக இருந்தாலும் சரி.
பிரிட்டானியா பிஸ்கெட்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவான பிஸ்கட் வகைகளை தயாரிப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை பிரிட்டானியா, பார்லே மற்றம் ஜிஎஸ்கே குழுமம் (ஹார்லிக்ஸ்) ஆகிய நிறுவனங்களாகும். உலகம் முழுதம் அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொண்ட விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருளாகவும் (Fast Moving consumer goods) உள்ளது.
முன்னணி பிஸ்கெட் நிறுவனம்
பிஸ்கெட் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிப்பில் சுமார் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம் பிரிட்டானியா ஆகும். இது பாகிஸ்தானின் முன்னாள் தலைவரான முகமது அலி ஜின்னாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். இந்தியாவின் முதல் மற்றும் பழமையான பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனம் என்றும் பெயர் பெற்றதாகும். இந்நிறுவனம் தற்போது பிஸ்கெட் முதல் பேக்கரி உணவு வரை அனைத்து நுகர்வோர் உணவுப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
வெண்ணெய் பிஸ்கெட்
பிரிட்டானியா நிறுவனம் பிஸ்கெட் தயாரிப்புக்கு பெரும்பாலும் பால் பொருளான வெண்ணெய், நெய் மற்றும் காய்கறி எண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்தி வருகிறது. ஆனாலும் விளம்பரப்படுத்தும்போது முழுவதும் வெண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிஸ்கட் என்றே விளம்பரப்படுத்தி வருகிறது. பிரிட்டானியா மட்டுமல்ல, பார்லே மற்றம் ஹார்லிக்ஸ் போன்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனங்களும் இதே உத்தியைத் தான் பயன்படுத்தி வருகிறது.
இருக்கு ஆனா இல்லே
நூற்றாண்டு பழமை வாய்ந்த பிஸ்கெட் நிறுவனம் என்பதால், இதன் தயாரிப்புகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை என்றும் நம்பகத் தன்மை வாய்ந்தது என்றும் அனைத்து பொதுமக்களும் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கை இப்போது அமுல் நிறுவனத்தால் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. காரணம் அது கொடுத்துள்ள விளம்பரத்தால் பிரிட்டானியா, பார்லே போன்ற நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
கடுமையான போட்டி தான்
அதாவது, நுகர்வோரை அதிக அளவில் கவரும் எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும் இரு வேறு நிறுவனங்களுக்குள் போட்டி கடுமையாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் புதிதாக களமிறங்கும் ஒரு நிறுவனம் ஏற்கனவே இருக்கும் பொருளை தரமான தயாரிப்பாக வழங்க முன்வரும்போது, அது ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனத்திற்கு கடும் இழப்பாகவே இருக்கும். அந்த இழப்பை சரிக்கட்ட அதற்கு சில காலம் பிடிக்கும். இந்த நிலைமை தான் தற்போது பிரிட்டானியா, பார்லே ஆகிய நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அமுல் தயாரிப்புகள்
பிரிட்டானியா போல், பால் மற்றும் பால் துணைப் பொருட்கள் உற்பத்திக்கு மிகவும் புகழ்பெற்றது அமுல் நிறுவனம். பிற நிறுவனங்களைப் போல் இல்லாமல் அமுல் ஒரு உற்பத்தியாளர் ஒன்றியம் ஆகும். கடந்த 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமுல் தரமான பால் மற்றும் பால் துணைப்பொருட்களுக்கு உலகளாவிய அளவில் புகழ்பெற்ற அமைப்பாகும்.
சமீபத்தில் ஒட்டகப் பால்
அமுல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதேற்கெற்ப உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் ஒட்டகப் பாலை 200 மி.லிட்டர் பெட் பாட்டிலில் அனைத்து விற்பனைக்கு கொண்டு வந்தது. அதே போல் தற்போது பிஸ்கெட் தயாரித்து விற்பனை செய்யவும் முன்வந்துள்ளது.
இப்போ பட்டர் பிஸ்கெட்
அமுல் நிறுவனம் பிஸ்கெட் தயாரிப்பில் களம் இறங்கிய உடனே அதை விளம்பரமும் செய்துவிட்டது. அந்த விளம்பரம் தான் தற்போது போட்டி நிறுவனங்களக்கு சிக்கலையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். அமுல் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பிஸ்கெட்டுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வெண்ணெய் உபயோகிக்கப்படுவதாக விளம்பரப்படுத்தியுள்ளது.
அத்தனையும் டூப்ளிகேட்டா
அமுல் நிறுவனம் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பற்பசை விளம்பரத்தில் உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்பது போல், நீங்கள் வாங்கும் பிற நிறுவன பிஸ்கெட்டில் வெறும் 0.3 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரையே வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மீதம் முழுவதும் காய்கறி எண்ணெய் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாங்கள் தயாரிக்கும் வெண்ணெய் பிஸ்கெட்டில் 25 சதவிகிதம் வரை வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
உசுப்பேற்றிய விளம்பரம்
அமுல் நிறுவனம் தனது விளம்பரத்தில், மேலும் இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த நிறுவனங்களின் பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் உசுப்பேற்றியுள்ளது. அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்த பிஸ்கெட் பிரியர்கள், ஆஹான் நாம் இதுவரையில் வாங்கி சாப்பிட்ட பிஸ்கெட்டில் உண்மையில் வெண்ணெய் ரொம்ப கம்மியாத்தான் இருக்கோ, பயபுள்ளைங்க நம்மள ஏமாத்திட்டாங்களே என்று விசனப்பட்டு ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்கள்.
விலை அதிகம் தான்
அமுல் நிறுவனத்தின் பட்டர் பிஸ்கெட்டுடன் மற்ற நிறுவன பிஸ்ட்டுகளை ஒப்பிடும்போது, அமுல் பிஸ்கெட்டுகளின் விலை 2 மடங்கு அதிகம்தான். 40 கிராம் எடையுள்ள அமுல் பிஸ்கெட் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் என்றால் பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டின் விலை ரூ.5 மட்டுமே. மிக சமீபத்தில் பிஸ்கெட் விற்பனையை தொடங்கியுள்ள அமுல் தற்போது குஜராத்தில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தியுள்ளது. அமுல் நிறுவனம் கொடுத்துள்ள விளம்பரத்திற்கு போட்டியாக வரும் நாட்களில் மற்ற போட்டி நிறுவனங்களும் பதிலடியாக விளம்பரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.