டெல்லி: சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான, வருமான வரிக் கணக்கில் வராத வெளிநாட்டுச் சொத்துக்கள். சுமார் 30 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தவைகளை, வருமான வரி சோதனையில் கண்டு பிடித்திருப்பதாக நேற்று (ஜூலை 28, 2019) செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது நேரடி வரி வாரியம்.
இத்தனை தவறுகளையும் செய்தவர்கள் பல பேர் சம்பந்தப்பட்ட ஒரு குழுவாம். இந்த குழுவில், பொறுப்பான அரசியல் பதவிகளில் அமர்நதிருப்பவர்களும் அடக்கம் எனச் சொல்லி இருக்கிறார்கள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள். இந்த குழுவைச் சார்ந்தவர்களின் டெல்லி, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் என 13 இடங்களில் நடத்திய சோதனையில் இந்த திடுக்கிடும் உண்மை தெரிய வந்திருக்கிறது.
கடந்த பல தசாப்தங்களாக, அருகில் இருக்கும் மாநில அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் அரசியல் பிரமூகர்களால் இந்த குழு இயக்கப்பட்டு வருவதாகவும், கடந்த பல தசாப்தங்களாக, பெரிய அளவில் கணக்கில் வராத வருமானத்தை பதுக்கிக் கொண்டிருப்பதாகவும், நேரடி வரி வாரியம் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தி குறிப்பில் எந்த ஒரு அரசியல் தலைவர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.
நேரடி வரி வாரிய செய்திக் குறிப்புகள் படிப் பார்க்கும் போது கடந்த ஜூலை 23, 2019 அன்று, ஒரு குழுவில் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழுவில், கட்டுமானம் மற்றும் அசையாச் சொத்துக்கள் பரிமாற்றம் தொடர்பாக, கணக்கில் வராத பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம். இந்தியாவில் பல வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை, மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய வெளிநாடுகளில் (Tax Heaven countries), வெளிநாட்டு ட்ரஸ்டுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் பல விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களாக வைத்திருக்கிறார்களாம்.
அப்படி வெளிநாட்டுச் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பல தசாப்தங்களாக பிரிட்டீஷின் வெர்ஜின் தீவுகள், பனாமா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் என பல்வேறு நாடுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்களாம். இந்த சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, இந்த குழுவில் சம்பந்தப்பட்ட ஒரு நபர், கரீபியன் தீவுகளில் குடியுரிமை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும், நேரடி வரி வாரிய செய்திக் குறிப்புகளில் சொல்லி இருக்கிறார்கள், வருமான வரித் துறையினர். இப்போது சிக்கியவர்கள், கறுப்புப் பணச் சட்டம் 2015-ன் கீழும், இந்திய வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் வருமான வரித் துறையினர்.