டெல்லி: முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் பணி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அவர் விருப்பு ஓய்வில் செல்வது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுபாஷ் சந்திர கார்க்கின் பதவிக் காலம் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் இருந்தாலும், அவரை நிதித்துறை செயலாளர் பதவியில் இருந்து திடீரென மின்சக்தி அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர் விருப்பு ஒய்வில் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசுப் பதவிகளில் மிக உயர்ந்த பதவிகளாக இருப்பது, மத்திய கேபினட் அமைச்சகத்தின் கீழ் உள்ள அதிகாரம் மிக்க செயலாளர் பதவிகளாகும். அதிலும் குறிப்பாக கேபினட் செயலாளர், பாதுகாப்புத் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர், தேர்தல் ஆணையத் தலைவர் போன்ற பதவிகள் தான் கிட்டத்தட்ட மத்திய கேபினட் அமைச்சர் போன்ற அந்தஸ்து உள்ள பதவிகளாகும்.
இப்பதவியில் உள்ளவர்கள் அதற்கு இணையான பதவிக்கு இடம் மாற்றம் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரெய்சினா பிளாக்கில் உள்ள மேலே சொன்ன துறைகளுக்கு மாற்றப்பட்டால் தான் மாறுதலாகி செல்வார்கள். இல்லாவிட்டால் கதை கந்தலாகிவிடும். பிடிக்காத இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டால், உடனடியாக கடந்த விருப்ப ஓய்வில் மூட்டையை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுவார்கள்.
இதே நிலைதான் தற்போது அதிகாரம் மிக்க பதவியில் இருந்த சுபாஷ் சந்திர கார்க்கின் நிலையும். நிதித்துறை செயலாளராக இருந்த தன்னை, தனக்கு துளி கூட விருப்பமே இல்லாத மின்சக்தி அமைச்சகத்திற்கு (நம்மூர் உயர் அதிகாரிகளை ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்கு மாற்றுவது போல்) தடாலடியாக இடமாற்றம் செய்துவிட்டார்கள்.
நிதித்துறைச் செயலாளர் பதவி என்பது, பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது, நாட்டின் நிதிக்கொள்கைக்கு குழுவிற்கு பொறுப்பு வகிப்பது, ரிசர்வ் வங்கி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்துக்கொள்வது போன்ற நாட்டின் அதிகாரம் மிக்க பணிகளை கவனித்துக்கொள்வதாகும்.
ஆனால், மின்சக்தி துறை செயலாளர் பதவியானது, நிதிச்செயலாளர் பதவியைவிட மிகவும் தகுதியிலும் அதிகாரத்திலும் குறைந்த பதவி என்பதால், தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய சுபாஷ் சந்திர கார்க் உடனடியாக ஜூலை 24ஆம் தேதி விருப்ப ஓய்வு கடிதம் அளித்துவிட்டு வீட்டுக்கு நடையை கட்டிவிட்டார். இவருடைய பதவிக்காலம் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய துறையின் செயலாளராக இருப்பவர் விருப்ப ஓய்வில் சென்றது குறித்து எதுவுமே தெரியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுபாஷ் சந்திர கார்க் விருப்பு ஓய்வு குறித்து கடிதம் தனக்கு வரும் வரை அது பற்றி எதுவுமே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு அவரை இடம் மாற்றம் செய்த மறுநாளே அவர் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் அளித்துவிட்டார் என்றும், இருந்தாலும் இடம் மாற்றம் குறித்து அறிவிப்பு ஊடகங்களில் வெளிவந்த பின்னர் தான் தனக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைத்தது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். அது வரையிலும் அவர் ராஜினாமா செய்துள்ளது தனக்கு தெரியவே தெரியாது என்றும் கூறியுள்ளார்.