டெல்லி : கஃபே காஃபி டே (CCD) நிறுவனத்தின் இடைக்கால தலைவராக கர்நாடகாவின் முன்னாள் தலைமை செயலர் எஸ்.வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மிக பிரபலமான கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பின், அவரது உடல் இன்று நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தற்காலிக தலைவராக, எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கஃபே காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தாவிற்கு, சுமார் ரூ 7000 கோடி கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடைக்க எத்தனையோ முறை போராடியும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இறுதியாக காபி டே நிறுவனத்தை கோகோ கோலா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை மங்களூருக்கு தொழில் விஷயமாக தனது காரில் சித்தார்த்தா சென்று கொண்டிருந்தார்.
அப்போது உல்லால் அருகே உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் காரை நிறுத்துமாறு கூறிய சித்தார்த்தா, தன் டிரைவரிடம் சற்று தொலைவில் காத்திருக்குமாறு கூறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் சித்தார்த்தா வராததால், டிரைவரும் அவரை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவர் கிடைக்காத பட்சத்தில் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தான், இன்று காலை சுமார் 36 மணி நேரத்துக்கு பிறகு சித்தார்த்தாவின் உடல் கரை ஒதுங்கியது.
சித்தார்த்தா மறைவையொட்டி இந்தியாவில் உள்ள காபி டே நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சித்தார்த்தா மறைவால் அவர் வகித்து வந்த தலைவர் பதவிக்கு எஸ்வி ரங்கநாத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். இவர் தலைமையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிர்வாக இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழிலதிபர் சித்தார்த்க்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களை நடத்தும் இவரது நிறுவனங்களில், இந்தியாவில் சுமார் பத்தாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சமீப காலமாக அவருக்கு ஏற்பட்ட பெருத்த நஷ்டத்தினை கண்டு வந்த சித்தார்த்தா, மைண்ட் ட்ரீ என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை 3 ஆயிரம் கோடிக்கு விற்றதும் கவனிக்கதக்கது.
மேலும் காபி டே நிறுவனத்தையும் கோகோ கோலா நிறுவனத்திடம் விற்க பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சித்தார்த் சமீப காலமாக நஷ்டத்தை சந்தித்து வந்ததும், இதனால் மிகுந்த மன அழுத்ததில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.