கொடைக்கானல்: கொடைக்கானல் மலை மேல் விளையும் மருத்துவ குணம் நிறைந்த வெள்ளைப் பூண்டுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கு புவிசார் குறியீடு வழங்கி கவுரவித்துள்ளது.
கொடைக்கானலின் மேல் மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். குறிப்பாக வெள்ளைப்பூண்டு, பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மலைகளின் இளவரசி எனப் போற்றப்படும் கொடைக்கானலின் முக்கிய வருவாய் சுற்றுலா மட்டுமே. அதிலும் கோடைகாலங்களில் மட்டுமே அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு. இதைத் தவிர மலைவாழ் மக்களின் முக்கியத் தொழிலாக இருப்பது விவசாயம் மட்டுமே.
இங்குள்ள மலைவாழ் கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக கேரட், பட்டாணி, காலிஃபிளவர் மற்றும் வெள்ளைப்பூண்டு ஆகியவையே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இதில் மருத்துவக் குணம் உடைய வெள்ளைப்பூண்டுகள் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகின்றன .மற்ற இடங்களில் விளையும் பூண்டுகளைப் போல் இல்லாமல், இது சாம்பல் நிறத்திலும் அதிக காரத்தன்மையுடன் இருப்பதால் அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே பெய்யும் மழை நீரை விவசாயிகள் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் இங்கு பயிரிடப்படும் மருத்துவ குணம் நிறைந்த வெள்ளைப்பூண்டுக்கு உலகம் முழுவதும் அதிக மவுசு உள்ளது. சமவெளிப் பிரதேசங்களில் விளையும் வெள்ளைப்பூண்டில் இருப்பதைக் காட்டிலும், கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டில் ஆன்டி ஆக்சிடெண்ட், ஆர்கனோசல்ஃபர் (Organosulfur). பினோல் (Phenols), ஃபிளவனாய்டு (Flavonoids) உள்ளிட்ட அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
கொடைக்கானல் மலைப்பூண்டுகள் தலைவலி, வாயுக் கோளாறு, அஜீரணம், உடல் வலி, ஆஸ்துமா மற்றும் சோர்வை போன்றவற்றுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியது. அதோடு சமையலில் சேர்த்துக்கொண்டால் நறுமணத்தையும், அதிக சுவையையும் அளிக்கக்கூடியதாகும். இதன் காரணமாகவே கொடைக்கானல் மக்கள் வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காக கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமும், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவக் குணம் நிறைந்த கொடைக்கானல் வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தன.
புவிசார் குறியீடு குறித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய அரசும், தீவிரமாக ஆராய்ச்சி செய்து, கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டின் மருத்துவக்குணத்தையும் மகத்துவத்தையும் அனைவரும் அறியும் வகையில் புவிசார் குறியீடு வழங்கி கவுரவித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதை அடுத்து மஹாராஷ்டிரா, கர்நாடகாவிற்கு அடுத்து, 28 பொருட்களுடன் அதிக புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.