உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் மார்கெட்டிங் பிரிவை மட்டும் குறிவைத்து சுமார் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
உபர் நிறுவனத்தின் முடிவால் கிட்டதட்ட 400 ஊழியர்கள் கண்ணீர் உடன் அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளது.
நஷ்டம்
உபர் நிறுவனம் இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், முக்கியமான முடிவுகளைப் பல திசைகளில் திருப்பாமல் நிர்வாகத்துடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும் எனத் திட்டமிட்டு தனது மார்கெட்டிங் அணியிலிருந்து சுமார் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
75 அலுவலகம்
உபர் நிறுவனத்தின் மார்கெட்டிங் அணி தனது உலகளாவிய 75 அலுவலகங்களில் பணியாற்றி வருகிறது. இந்த முக்கியமான அணியில் இருந்து தான் தற்போது 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் 31, 2019 தேதி வெளியான தகவலின் படி உபர் நிறுவனத்தில் சுமார் 24,494 பேர் பணியாற்றுகின்றனர்.
சிஇஓ
உபர் நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் பொது விவகார பிரிவை ஜில் ஹேசில்பேக்கர் நிர்வாகம் செய்து வருகிறார். 400 ஊழியர்கள் பணிநீக்கத்திற்குப் பின் உபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Dara Khosrowshahi மின்னஞ்சல் வாயிலாக இனி மார்கெட்டிங் அணி கூடுதல் கவனத்துடனும், ஒருமித்த கருத்து மற்றும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும் எனத் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அணி மாற்றம்
இதேபோல் உபர் நிறுவனத்தின் மார்கெட்டிங் அணி மறுசீரமைப்புச் செய்து Mike Strickman அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வருவாய்
உபர் நிறுவனம் பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டு வெளியான முதல் காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்து 3.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புக்கிங்
அதேபோல் புக்கிங் எண்ணிக்கையும் 34 சதவீதம் அதிகரித்துச் சுமார் 14.6 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது. இதில் உபர்ஈட்ஸ் முக்கியப் பங்கை வகித்துள்ளது.
நஷ்டம்
வருவாய் மற்றும் புக்கிங் எண்ணிக்கை அதிகரித்தாலும் இயக்க வருவாய் அளவீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில், இந்தக் காலாண்டில் 116 சதவீதம் அதிகரித்து 1 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளது.