நேற்று (ஜூலை 30, 2019) பிரதமர் தலைமையிலான கேபினெட் நியமன கமிட்டி ராஜிவ் குமார் (Rajiv Kumar)-ஐ புதிய நிதி அமைச்சகத்தின் செயலராக நியமனம் செய்வதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
இதற்கு முன் நம் ராஜிவ் குமார் (Rajiv Kumar) நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (Department of Financial Services) நிதி சேவைகள் துறையின் செயலராக இருந்தார் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
நிதிச் செயலர் தான் மத்திய நிதி அமைச்சகத்தின் பெரிய அதிகாரி. நிதி அமைச்சகத்தின் கீழ் இருக்கும்...
1. பொருளாதார விவகாரத் துறை,
2. வருவாய்த் துறை,
3. செலவீனங்களுக்கான துறை,
4. நிதி சேவைகள் துறை,
5. முதலீடுகள் & பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறை
என ஐந்து துறைகளும் இனி Rajiv Kumar கீழ் தான் இயங்கப் போகிறது.
பின்புலம்
இவர் 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் தான் இவரின் கேடராக இருந்தது. விலங்கியலில் இளங்கலை அறிவியல் பட்டமும் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர். இவர் தான் சுபாஷ் சந்திர கார்கின் பதவியில் இனி அமர்ந்து அரசுக்கு உதவப் போகிறார். அதோடு கூடுதல் பொறுப்பாக நிதி சேவைகள் துறையையும் இவரே பார்த்துக் கொள்ளப் போகிறாராம். இவருக்கான பணிக் காலம் வரும் பிப்ரவரி 2020 உடன் நிறைவடைகிறதாம். அதுவரை இந்த உயர் பதவியில் இருந்து அரசுக்கு உதவப் போகிறார் Rajiv Kumar.
பணி அனுபவம்
Rajiv Kumar கடந்த செப்டம்பர் 2017-ல் தான் நிதி சேவைகள் துறையில் செயலராக பதவிக்கு வந்தார். இவர் பதவி காலத்தில் தான் இந்திய அரசு வங்கிகளில் இருந்த வாராக் கடன் பிரச்னை, பெரிய வங்கிகள் இணைப்பு, பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு பணம் கொடுத்து உதவியது, மூன்று முறை பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது என பல வேலைகளில், சத்தம் காட்டாமல் அரசுக்கு உதவி இருக்கிறார். இந்த 2017 காலத்துக்கு முன்பு கூட 2012 - 2015 காலங்களில் மத்திய அரசின் நிதித் துறையின் செலவீனங்களுக்கான துறையின் கீழ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
அரசுக்கு நெருக்கம்
அதோடு பிரதமரின் நிதி இணைப்பு (Financial Inclusion), வங்கிக் கடன்களை சாதாரண மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான வங்கிக் கணக்கு திட்டங்களை தொடங்கும் ஜன் தன் யோஜனா, முத்ரா கடன் திட்டங்கள் போன்றவைகள் இவர் பொறுப்பில் தான் நாடு முழுவதும் பரப்பப்பட்டதாம். மிக முக்கியமாக இந்தியாவின் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான 59 நிமிட கடன் திட்டத்தை செயல்படுத்தியதும் இவர் தானாம். அதோடு இந்தியாவின் நிதி சேவைகள் துறை தான் இந்திய வங்கிகளின் செயல்பாடுகள், நிதி நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பென்ஷன் அமைப்புகளைக் கண்காணித்து வந்தன.
2 வருட அனுபவம்
கண்காணிப்பு பணிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, பொதுமக்களுக்கு போதுமான கடன் வசதிகள் கிடைப்பதையும், குறிப்பாக சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் வசதிகளையும் உறுதி செய்யும் முக்கியமான வேலையையும் இந்த துறை தான் செய்து வந்தது. நம் Rajiv Kumar தற்போது ஆர்பிஐ வங்கியின் இயக்குநர் குழுவிலும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி நல்ல பணி அனுபவத்தோடு, அரசுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொண்டே இருந்ததால் தான், நம் Rajiv Kumar-க்கு இந்தியாவின் மிக முக்கியமான செயலர் பதவிகளில் ஒன்று கிடைத்திருக்கிறது.