சென்னை: நம் தமிழக அரசியல்வாதிகள், ஏதாவது திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் பெரும்பாலும் போதுமான நிதி இல்லை. கடன் வாங்க இருக்கிறோம், மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறோம் எனச் சொல்லிக் கேள்வி பட்டிருப்போம்.
இப்போது சமீபத்தில் வெளியான மத்திய தணிக்கையாளர் அறிக்கை (CAG - Comptroller of Auditor General) நமக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டுக்கு மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு 5,920 கோடி ரூபாய் நிதியை பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அதில் சுமார் 3,676 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் திருப்பி மத்திய அரசிடமே கொடுத்திருக்கிறது தமிழகம்.
62 சதவிகிதமா
மத்திய அரசின் 14-வது நிதி ஆணையம் தமிழக அரசுக்கு 2017 - 18 நிதி ஆண்டில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு மொத்தம் 5.920.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார்கள். அதில் 3,676 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இதை சதவிகிதத்தில் கணக்கிட்டால் சுமார் 62 சதவிகித பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ 5 சதவிகிதம், 10 சதவிகிதம் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் 62 சதவிகிதத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத பெரிய தொகையாக இருக்கிறது.
காரணங்கள்
ஏன் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்கிற கேள்விக்கு வழக்கம் போல மெத்தனமான காரணங்களே அரசியல்வாதிகளிடம் இருந்து வருகின்றன. அரசு திட்டங்களில் சொல்லப்பட்டிருப்பது போல சரியான நபர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் போவது அல்லது திட்டத்துக்கு தேவையான நபர்களைக் கண்டு பிடிக்க தாமதமாவது, வேலைகள் பொதுவாகவே தாமதமாக நடப்பது, திட்டமிட்ட காலத்தில் வேலைகள் முடியாமல் தொய்வில் இருப்பது என காரணங்கள் மலை அளவு குவிந்து கொண்டிருக்கின்றன. தமிழக மக்களுக்குப் பயன்பட வேண்டிய பணம் மீண்டும் மத்திய அரசு கஜானாவுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறது.
திட்டங்கள் 1
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்கிற, சரியான வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு மட்டும், மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியில் சுமார் 2,394 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல கிராம பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 758 கோடி ரூபாயை திருப்பி மத்திய அரசிடமே கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இப்படி மலைவாழ் மக்களுக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிக் கொடுத்த நிதியில் சுமார் 247 கோடி ரூபாயை பயன்படுத்த முடியாமல் திருப்பிக் கொடுத்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு.
திட்டங்கள் 2
தமிழக கிராம புற மக்களின் கிராம புற வியாபாரம், நிதி வசதிகள், வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த நிதியில் சுமார் 97 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இப்படி கிராம புற உள்ளூர் நிர்வாகத்துக்கு ஒதுக்கிய நிதியில் 194 கோடி ரூபாய், தமிழக பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு ஒதுக்கிய நிதியில் 23 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்தது என தமிழக அரசு சரியாக செயல்படாமல் சொதப்பி, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய அரசுக்கே திருப்பிக் கொடுத்த அவலத்தை அந்த சி ஏ ஜி (CAG - Comptroller of Auditor General) அறிக்கையில் பார்க்க முடிகிறது. இனியாவது ஒதுக்கும் நிதியை விரைவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.