பிரதமர் நரேந்திர மோடி வரலாறு காணாத வகையில் வெற்றி கண்டு 2வது முறையாக ஆட்சி அமைத்து இருந்தாலும் நாட்டின் மோசமான பொருளாதார நிலை, முதலீடு இல்லாமல் தவிக்கும் வர்த்தகத் துறை, ஜிஎஸ்டி பெயரில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை எனத் தொடர்ந்து அவரால் தீர்க்க முடியாத பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 50 கோடி ஊழியர்கள் பலன்பெறும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மோடி தலைமையிலான அரசு.
சம்பள விதிகள் 2019
கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்ஜிய சபாவில் சம்பள விதிகள் 2019 மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றது. இந்த மசோதா மூலம் இந்திய மக்கள் தொகையில் 5இல் இரண்டு பகுதி அல்லது 50 கோடி ஊழியர்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளனர்.
இதனால் பல கோடி குடும்பங்களின் வாழ்க்கையும் மாறப்போகிறது. இந்த அறிவிப்பின் பலன்கள் குறித்த செய்தி மக்கள் மத்தியில் இன்னும் போய்ச் சேராமல் இருக்கும் நிலையில், தெரிந்த ஊழியர்களும், ஊழியர் அமைப்புகளும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
7வது சம்பள கமிஷன்
மக்களைக் கவர வேண்டும் என மோடி அரசு கடந்த ஆட்சியின் போது 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் ஊழியர்களுக்குப் பல விதமான சலுகையை வாரிவழங்கியது. இதேபோல் ஊழியர்களுக்குச் சாதகமாகப் பல விதிகளை மாற்றி அமைக்கப்படும் எனப் பேசிய மோடி தற்போது செய்து முடிந்துள்ளார்.
50 கோடி ஊழியர்கள்
இப்புதிய மசாதா மூலம் 50 கோடி ஊழியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச சம்பள விதிகளின் படி சம்பளம் கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் இதர சேவைகளும் காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்தில் கொடுக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த இந்த Payment of Wages Act, 1936; the Minimum Wages Act, 1948; the Payment of Bonus Act, 1965; and the Equal Remuneration Act, 1976 ஆகிய 4 சட்டத்தை நீக்கிவிட்டு இப்புதிய மசாதா நடைமுறைக்கு வர உள்ளது.
அதன் மூலம் இந்திய அமைப்பிலிருந்து 2000 வகையான சம்பள முறைகள் அகற்றப்பட்டு உள்ளது.
சம்பள விதிகள்
இந்த மசோதாவால் பலன் பெறப்போகும் 50 கோடி ஊழியர்களில், சுமார் 60 சதவீதம் பேர் குறைந்தபட்ச சம்பள விதிகளின் கீழ் கட்டுப்படாமல் இருந்த நிலையில், தற்போது இவர்கள் அனைவருக்கும் இந்தப் பலன் கிடைக்க உள்ளது.
இனி உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பது மட்டும் அல்லாமல், விவசாயம், சுரங்கம் எனக் கிட்டத்தட்ட 1709 வேலைவாய்ப்புத் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு சம்பள விதிகளின் கீழ் கட்டுப்பட வேண்டும்.
100 நாள் வேலை திட்டம்
மேலும் இந்த விதிகள் MGNREGA ஊழியர்களுக்கு, அதாவது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என மத்திய வேலைவாய்ப்புத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இப்புதிய விதியால் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு இனி வேலை திறன் அல்லது பிராந்திய அடிப்படையாக வைத்தே சம்பளத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
உதாரணம்
உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஊழியருக்கு ஒரு நாள் சம்பளம் 500 என்றால் தமிழ்நாட்டில் 100 ரூபாய் கூடக் கொடுக்கும் சக்தியை மத்திய அரசு இப்புதிய மசோதாவால் பெற்றுள்ளது.
இதற்கு முன் இருந்த கொள்கையின் படி ஒரு ஊழியருக்கான சம்பளத்தை மத்திய அரசு அது என்ன வேலை? வேலை திறன் என்ன? எந்தப் பிராந்தியம்..? ஆகிய 3 காரணிகளை வைத்து தான் சம்பளத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இப்புதிய மசோதா வேலை திறன் அல்லது பிராந்திய அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயம் செய்யலாம் எனத் தெரிகிறது.
இதனால் ஒவ்வொரு மாநில ஊழியர்களும் விதவிதமான சம்பளத்தைப் பெற வாய்ப்புகள் உண்டு.