2019ஆம் ஆண்டின் முதல் 7 மாதம் அதாவது ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 6.07 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் தான் சென்செக்ஸ் வரலாறு காணாத உயர்வையும் சந்தித்துச் சில நாட்களில் சரிவையும் சந்தித்தது.
இப்படி மொத்த பங்குச்சந்தையும், முதலீட்டாளர்களும் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலையில் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மட்டும் அதிகளவில் சம்பாதித்துள்ளனர்.
ப்ளூம்பெர்க்
ஜூலை மாத வரையிலான காலத்தில் இந்திய பங்குச்சந்தையும், வர்த்தகச் சந்தையும் பல்வேறு காரணங்களுக்காகப் பாதிப்பு அடைந்திருந்தாலும் டாப் 10 பணக்காரர்களில் 5 பேர் மிகப்பெரிய அளவில் சம்பாதித்துள்ளனர்.
இதில் 4 பேர் கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துச் சொத்து சேர்த்துள்ளனர் என ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தரவுகள் கூறுகிறது.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி-யின் சொத்து மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 3.06 பில்லியன் டாலர் அதிகரித்துப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அசிம் பிரேம்ஜி அவர்களின் சொத்து மதிப்பு 20.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இக்காலத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த 7 மாத காலத்தில் 2.94 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 47.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு இந்த 7 மாத காலத்தில் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
உதய் கோட்டாக்
நாட்டின் முன்னணி தனியார் வங்கிளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் கோட்டாக்-இன் சொத்து மதிப்பு 2019ஆம் ஆண்டில் முதல் 7 மாதத்தில் 1.96 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து, இவரது மொத்த சொத்து மதிப்பின் அளவு 13.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகளின் மதிப்பு 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மற்ற தலைகள்..
இவர்களைத் தொடர்ந்து கெளதம் அதானி 1.11 பில்லியன் டாலரும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் பீனு கோபால் பங்கூர் 0.88 பில்லியன் டாலரும், ஹெச்சிஎல் தலைவர் ஷிவ் நாடார் 0.84 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இவர்களோடு, ஏர்டெல் சுனில் மிட்டல் சொத்து மதிப்பு 511 மில்லியன் டாலரும், பஜாஜ் குரூப் தலைவர் ராகுல் பஜாஜ்-இன் சொத்து மதிப்பு 73 பில்லியன் டாலரும் உயர்ந்துள்ளது.
லட்சுமி மிட்டல்
ArcelorMittal ஸ்டைல் நிறுவன தலைவரான லட்சுமி மிட்டல் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் 2.01 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 11.8 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
சரிவு
மிட்டல் அவர்களைத் தொடர்ந்து வாடியாகக் குழுமத்தின் தலைவர் நுசில் வாடியா 1.44 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். இவரைத் தொடர்ந்து திலிப் சங்வி, ராதகிருஷ்ணன் தமனி, குமார் மங்களம் பிர்லா, சைரஸ் பூன்வாலா ஆகியோர் 0.50 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.