புனே, டெல்லி, இந்தியா: H1b visa வாங்கி வேலைக்காக அமெரிக்காவுக்குச் செல்ல கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் நம் இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு H1b visa மறுப்பதை அமெரிக்கா அதிகரித்துவிட்டது. மொட்டையாக மறுத்துவிட்டது எனச் சொல்வதை விட வரலாறு காணாத வகையில் அதிகமாக மறுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அப்படி என்ன H1b visa பெரிதாக மறுத்துவிட்டார்கள்..? அப்படி என்றால் இந்தியாவின் பெரிய பெரிய ஐடி கம்பெனிகளுக்கும் இதே நிலை தானா எனக் கேட்டால்..? ஆம் தான் பதில்.
மறுப்பு
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை சார் நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், விப்ரோ போன்ற நான்கு பெரிய நிறுவனங்கள் விண்ணபித்த மொத்த H1b visa எண்ணிக்கையில் சுமார் 50 சதவிகித விண்ணப்பங்களை கடந்த ஆண்டில் அமெரிக்கா மறுத்திருக்கிறது. அதோடு டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே அதிக வேலை, அதிக சம்பளம் என்கிற முழக்க்கமும் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
மறுப்பு சதவிகிதம்
கடந்த 2014 - 15 ஆண்டுகளில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனம் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் விண்ணப்பித்த மொத்த H1b visa விண்ணப்பங்களில் சுமார் 2 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் கடந்த அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2018 வரையான காலத்தில் மட்டும் ஹெச் சி எல் நிறுவனத்துக்கு 43 சதவிகித H1b visa விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இன்ஃபோசிஸ்-க்கு 57 சதவிகித H1b visa விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
டிசிஎஸ்
அதே போல, 2014 - 15 ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனம் விண்ணப்பித்த மொத்த H1b visa விண்ணப்பங்களில் 6 சதவிகித விண்ணப்பங்களை நிராகரித்தது அமெரிக்கா. ஆனால் கடந்த அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2018 வரையான காலத்தில் மட்டும் விண்ணப்பித்த மொத்த H1b visa விண்ணப்பங்களில் சுமார் 37 சதவிகித H1b visa விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அதே அக்டோபர் - டிசம்பர் காலத்தில், விப்ரோ நிறுவனத்தில் 62% பேருக்கு H1b visa மறுக்கப்பட்டிருக்கிறது. சரி இப்படி H1b visa விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டால் அடுத்த என்ன நடக்கும்..? Request For Evidence (RFE).
சிக்கல்
ஒரு முறை H1b visa மறுக்கப்பட்டால் அதன் பின் மேலே சொன்னது போல கூடுதல் ஆதாரங்களைக் கேட்பார்கள். இதற்கு முன் கூடுதல் ஆதாரங்கள் தொடர்பான காகித வேலைகள் 30 - 50 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். ஆனால் இப்போது சுமாராக 600 - 1000 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு ஊழியருக்குமான செலவு மற்றும் வேலைப் பளு அதிகரிக்கிறது என்கிறார்கள் விசா தொடர்பான சிக்கல்களைக் கையாளும் வழக்கறிஞர்கள்.
பயன் இல்லை
கடந்த 2014 - 15-ம் ஆண்டில் H1b visa மறுத்தவர்களில் 83.2 சதவிகிதத்தினருக்கு கூடுதல் ஆதாரங்களை சமர்பித்த பின் விசா கொடுத்தார்கள். ஆனால் கடந்த அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2018 வரையான முதல் காலாண்டில் கூடுதல் விவரங்களைச் சமர்பித்த பின்னரும் 62.7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே H1b visa கொடுத்திருக்கிறார்களாம். ஆக போதுமான விவரங்களைக் கொடுத்தால் கூட உண்மையாகவே கிடைக்க வேண்டிய விசா கூட கிடைக்காமல் போகும் வாய்ப்பு பயங்கரமாக அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
நாஸ்காம் தரப்பு
இந்திய ஐடி நிறுவனங்களின் H1b visa விண்ணப்பங்கள் பெரிய அளவில் நிராகரிக்கப்படுகின்றன. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் இருக்கும் அமெரிக்கா போன்ற சந்தைகளில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் சிரமம் ஏற்படுவதாகச் சொல்லி இருக்கிறது. அதோடு ஐடி நிறுவனங்களுக்கு H1b visa மறுக்கப்பட்டால் அல்லது கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டால், அது காகித வேலைகளை அதிகப்படுத்துவது, ஒட்டு மொத்த வேலைப் பளுவை அதிகப்படுத்துவதோடு நிற்காமல், ஐடி கம்பெனிகளுக்கு பெரிய செலவும் வைப்பதாகச் சொல்லி இருக்கிறது நாஸ்காம்.
ஆக யார் என்ன கதறினாலும் அமெரிக்கா, தன் ஐடி சந்தையை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.