அனில் அகர்வால், இந்தப் பெயரை கேட்டாலே பலருக்கும் கோபம் வரும், இந்தக் கோபத்திற்குக் காரணம் 13 பேரின் உயிர். தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிராகவும், அனில் அகர்வாலுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்து மறக்க முடியாது.
இதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு முடிவு எடுக்கப்படாத நிலையில் மக்கள் கண்ணீர் உடன் காத்துக்கிடக்கும் நிலையில் இதன் உரிமையாளர் அனில் அகர்வால் புதிய வர்த்தகத்தைத் துவக்கத் திட்டமிட்டு வருகிறார்.
ஜெட் ஏர்வேஸ்
கடனில் தவிக்கும் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் மீட்டு எடுக்க அந்நிறுவனம் புது முதலீட்டாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதனிடையில் ஏற்கனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பெரும் முதலீட்டாளர்கள் இருவர் கைவிட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற அனில அகர்வால் முன் வந்துள்ளார்.
முன் அனுபவம்
இதுவரை விமானச் சேவை வர்த்தகத்திலோ அல்லது அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்திலோ அனுபவம் இல்லாத அனில் அகர்வால் பல ஆயிரம் கோடி கடனில் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து, விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த டீல் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியாவில் விமானச் சேவையிலும் அனில் அகர்வாலின் கொடி பறக்கும். சமீபத்தில் முகேஷ் அம்பானி விமான எரிபொருள் விற்பனைக்கும், உற்பத்திக்கும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது.
வால்கேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
ஜெட் ஏர்வேஸ் கடனிலிருந்தாலும், இந்தியாவில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளைப் பார்த்து அனில் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தால் முக்கியப் பங்குதாரர் ஆக இருக்கும் வால்கேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை வாங்கி இத்துறைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
வால்கேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து பனாமா முதலீட்டு நிறுவனமான அவென்டுலோ குரூப் மற்றும் ரஷ்யா ஆர்ஏ கிரியேட்டர் ஆகிய நிறுவனங்களும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயார் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தற்போது ஜெட் ஏர்வேஸ் உள்ளது. இதற்குக் காரணம் செப்டம்பர் 27க்குள் இந்நிறுவனம் பெற்ற கடனுக்கான தீர்வு திட்டத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொடுத்தாக வேண்டும்.