மும்பை, இந்தியா: Reliance நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting) சீரும் சிறப்புமாக தற்போது மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது.
அதில் Reliance Jio Gigafiber திட்டத்தை வரும் செப்டம்பர் 05, 2019 முதல் கொண்டு வருவதாக பெருமையோடு சொல்லி போட்டியாளர்களுக்கு பயம் காட்டி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
அப்படி என்ன தான் Reliance Jio Gigafibre பெரிய திட்டம். இந்த திட்டத்தால், ஜியோ நிறுவனம், இந்திய டெலிகாம் சந்தையையே தன் கைக்குள் முழுமையாக கொண்டு வந்து விட முடியுமா..? வாங்க பார்ப்போம்.
Reliance Jio Gigafibre
Reliance Jio Gigafibre திட்டத்தின் மூலம்
1. லேண்ட் லைன் கால்கள்
2. டிவி இணைப்புகள்
3. பிராட் பேண்ட் இணைப்புகள்
4. மல்டி பிளேயர் கேமிங் மற்றும்
5. வீடியோ கான்ஃபிரன்சிங் வசதிகள்
என ஐந்து முக்கிய வசதிகளை வழங்க இருக்கிறது ஜியோ நிறுவனம். இதிலேயே பாதி எதிராளிகள் காலி. இப்போது அடுத்த வெடி குண்டு என்ன வென்று பார்த்தால் இந்த திட்டங்களுக்கான விலை.
10-ல் ஒரு பங்காமாம்
மாதம் 700 ரூபாய் தொடங்கி 10,000 ரூபாய் வரை பல திட்டங்களை களம் இறக்கப் போகிறது Reliance Jio Gigafibre. மிக முக்கியமாக உலகில் இந்த சேவைகளுக்கு வசூலிக்கும் தொகையில் 10-ல் ஒரு பங்கு தான் இந்த சேவைகளுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ். அதாவது உலகம் முழுக்க மேலே சொன்ன சேவைகளை எல்லாம் பெற மாதம் 7,000 ரூபாய் கட்டணம் செலுத்தினால் தான் முடியும் என்றால்... ரிலையன்ஸ் அந்த சேவைகளை மாதம் 700 ரூபாய் முதல் கொடுக்க முன் வந்திருக்கிறதாம்.
வாடிக்கையாளர்கள்
Reliance Jio Gigafibre திட்டத்தின் கீழ் ஏற்கனவே இந்தியாவின் 1,600 நகரங்களில் சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் பதிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனமோ இரண்டு கோடி வீடுகள் மற்றும் 1.5 கோடி வியாபார நிறுவனங்களுக்கு தன் Reliance Jio Gigafibre சேவையை வழங்க திட்டம் தீட்டி ரெடியாக வைத்திருக்கிறார்களாம். ஒரு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஹெச் டி 4 கே எல் இ டி டிவி உடன் ஒரு 4 கே செட் டாப் பாக்ஸும் இலவசமாக கொடுக்கப் போவதாகவும் சொல்லி சந்தையை கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜியோ அறிமுகம்
Reliance Jio தொடங்கப்பட்டு இன்னும் மூன்று ஆண்டுகள் கூட முழுமையாக முடிந்தபாடில்லை. ஆனால் அதற்குள் வருவாய் அடிப்படையில் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நம்பர் 2 டெலிகாம் நிறுவனமாகவும் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி இருக்கிறது. ஆக அதே போல தற்போது Reliance Jio Gigafibre திட்டத்தையும் பறக்க விட ஸ்கெட்ச் போட்டு களம் இறங்கி இருக்கிறது ரிலையன்ஸ். அதற்குத் தான் உலகிலேயே மிகப் பெரிய அளவில் பிராட்பேண்ட் சேவைகளைத் தொடங்கியும் இருக்கிறது ஜியோ.
வலு சேர்ப்பு
கடந்த ஆகஸ்ட் 2018-ல் Reliance Jio Gigafibre திட்டத்துக்கான முன் பதிவுகள் தொடங்கியது. அதோடு கடந்த அக்டோபர் 2018-ல் ரிலையன்ஸ் நிறுவனம் டென் நெட்வொர்க்ஸ், ஹதவே கேபிள், டேடா காம் போன்ற டிவி சேனல் சேவை நிறுவனங்கள் தொடங்கி பிராட்பேண்ட் சேவைகள் வரை பலவற்றையும் சுமார் 5,200 கோடி ரூபாய் விலை கொடுத்து வளைத்துப் போட்டது ஜியோ. இந்த முதலீடுகள் வழியாக 27,000 கேபிள் ஆபரேட்டர்களை இணைத்து சேவை வழங்க திட்டம் வைத்திருக்கிறது. இனி இந்த கேபிள் ஆபரேட்டர்களுக்கு Reliance Jio Gigafibre இணைப்புகள் வழியாக வருமானம் ஈட்டலாம் எனவும் சொல்லி இருக்கிறார் அம்பானி.
வொயர் வழி இணையம்
இந்தியாவில் எப்போதுமே வொயர்கள் வழியான பிராட்பேண்ட் இணையச் சேவை மிகக் குறைவாகவே பரவி இருக்கிறது. இப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப களம் இறங்கி இருக்கிறது Reliance Jio Gigafibre. கடந்த மே 2019-ல் 1.85 கோடி இணைப்புகள் தான் வொயர் மூலமாக பிராட்பேண்ட் சேவையைப் பெற்று வருகிறார்கலாம். ஆனால் வொயர் லெஸ் முறையில் சுமார் 56.25 கோடி பேர் இணைய சேவையைப் பெற்று வருகிறார்களாம். Reliance Jio Gigafibre திட்டம் முழு வீச்சில் தொடங்கப்பட்டால் வொயர் வழியாக இணைய சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஜியோவைப் போல பெருகும் எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
அரசு திட்டங்கள்
ஏற்கனவே, மே 2018-ல் கொண்டு வந்த மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பாலிசி திட்டப் படி சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை இந்தியாவில் வொயர் வழியாக இணையத்தைக் கடத்தும் பிராட்பேண்ட் திட்டங்களில் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதை ஜியோ செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதோடு 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் பொது வைபை ஹாட் ஸ்பாட்கள், 2022-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி பொது வைபை ஹாட் ஸ்பாட்களையும் நிறுவ வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ரிலையன்ஸ் அதை சாத்தியப் படுத்திக் கொண்டிருக்கிறது.