வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா மீது தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் வேலைவாய்ப்புக்காக அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் அரசு புதிதாக ஒரு விசா கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.
இப்புதிய கட்டுப்பாட்டின் மூலம் இந்தியர்களுக்குக் கிடைக்கும் சில பல வாய்ப்புகளும் முழுவதுமாகப் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வருமான அளவீடு
அதிபர் டிரம்ப் அரசு அறிவித்துள்ள புதிய விதிகளின் படி இனி வரும் காலத்தில், அரசு நிர்ணயம் செய்துள்ள வருமான அளவீட்டை எட்ட முடியாதவர்கள் அல்லது உணவு, மருத்துவம், வீட்டு வசதி ஆகியவற்றைப் பெற முடியாதவர்களுக்கு விசா மற்றும் கிரீன் கார்டு வழங்க மறுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இப்புதிய விதிமுறை வருகிற அக்டோபர் 15 முதல் அமலாக்கம் செய்யப்படும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
விளக்கம்
இப்புதிய விதிமுறைகளின் படி ஒரு தனிநபராக அமெரிக்காவில் வாழ ஏற்ற வருமானத்தைப் பெற்று இருக்க வேண்டும். அரசு உதவிகள், உறவினர்கள் உதவிகள், தனியார் நிறுவன உதவிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குச் செல்ல நினைப்பவர்களுக்கு விசா மறுக்கப்படும்.
அமெரிக்க, அமெரிக்கர்கள்
இதன் மூலம் அமெரிக்க மக்களின் வரிப் பணம், அமெரிக்க மக்களுக்கும், வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும். வெளிநாட்டிலிருந்து வர நினைக்கும் மக்கள் சொந்தக் காலில் நிற்கும்போது அமெரிக்க மக்களின் சுமை குறையும். இதுநாள் வரையில் வந்த வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க அரசும், மக்களும் நிறைய உதவி செய்துள்ளார்கள், இனி அதற்கு இடமில்லை என் அமெரிக்கக் குடியுரிமை சேவை பிரிவு தலைவர் கென் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
பிரிவினை எண்ணம்
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிய நாளிலிருந்து வெளிநாட்டவர்களின் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிகளவிலான பிரிவினை எண்ணம் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது.
அமெரிக்கா- மெக்சிகோ
இதுமட்டும் அல்லாமல் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா- மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதேபோன்ற உணர்வு தான் தற்போது ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகள் மத்தியிலும் உருவாகியுள்ளது.
இந்தியர்கள்
ஏற்கனவே அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 50 சதவீத வாய்ப்புகளும் குறைந்துள்ளது.