இந்த வாரம் முழுக்க ரிலையன்ஸ் நிறுவனமும், முகேஷ் அம்பானியும் தான் தலைப்பு செய்தி, அந்த அளவிற்குத் திங்கட்கிழமை வெளியிட்ட வருடாந்திர கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளார்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கெமிக்கல், ரீடைல், டெலிகாம் சேவைகளை அளித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது புதிதாக ஒரு வர்த்தகத் துறையில் இறங்கியுள்ளது. இப்புதிய வர்த்தகத்தில் கூகிள், அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் போட்டிப் போட உள்ளது.
அரசு அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசு, இந்தியாவில் இருக்கும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், தங்களது டேட்டாவை இந்தியாவில் தான் வைக்க வேண்டும், வெளிநாட்டில் வைக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது மத்திய அரசு.
இந்தியர்களின் தகவல்களை இந்தியாவிலேயே வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்தாகப் பார்க்கப்பட்டது.
கூட்டணி
இதன் படி ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் டேட்டா சென்டர் அமைக்க உள்ளது, அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவையான Azure-ஐ நிறுவ உள்ளது. இதை இந்தியாவில் இருக்கும் பிற நிறுவனங்களை இந்த டேட்டா சென்டரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்காக இரு நிறுவனங்களும் சுமார் 10 வருட ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் சேவை
இக்கூட்டணி இந்தியாவில் கிளவுட் சேவை, டேட்டா ஸ்டோரேஜ், வெப்சைட் ஹோஸ்டிங் ஆகியவற்றை அளிக்க உள்ளது. ஜியோவின் இந்தச் சேவை இத்துறையில் சிறந்து விளங்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ்-க்கு கடும் போட்டியாக இருக்கப் போகிறது. அமேசான் நிறுவனத்தோடு கூகிள் நிறுவனமும் இப்போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டணம்
இந்த மாபெரும் டெக் நிறுவனங்களின் மத்தியில் போட்டிப் போட முகேஷ் அம்பானிக்கு இருக்கும் ஓரே ஆயுதம் கட்டணம். கூகிள், அமேசான் நிறுவனத்தை விடவும் குறைவான கட்டணத்தில் சேவை அளித்தால் நிச்சயம் வர்த்தகத்தையும் லாபத்தை அடைய முடியும் என அம்பானி நம்புகிறார். சொல்லப்போனால் மலிவான கட்டணம் தான் முகேஷ் அம்பானியின் ஒரே ஆயுதம்.
பிற சேவை
இக்கூட்டணியின் மூலம் இந்தியர்களுக்கான பிராந்திய மொழிகளில் speech recognition மற்றும் natural language understanding தளத்தை எளிதாக உருவாக்க முடியும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.