மும்பை, இந்தியா: ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio எப்படி வந்த உடன் இந்திய டெலிகாம் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கி, அனைவரையும் காலி செய்ததோ, அதே போல இன்று Jio gigafiber களம் இறங்கி இருக்கிறது.
Jio gigafiber திட்டத்தில் அடுத்து வரும் சில காலாண்டுகளில், ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொண்டே, திரை அரங்கங்களில் முதல் நாள் வெளியாகும் சினிமாக்களை பார்க்கலாம் எனச் சொல்லி இருந்தார் முகேஷ் அம்பானி.
அதற்கு வாய் திறந்து சத்தமாக பேச முடியாமல், தில்லாக எதிர்த்து வியாபார ரீதியாக போட்டியும் போட முடியாமல் வியாபார வலியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் மால் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள்.
சிக்கல்
வரும் 2020-ம் ஆண்டு மத்திக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio gigafiber ப்ரீமியம் திட்டத்தின் வழியாக, சினிமா ரிலீஸ் ஆகும் முதல் நாளிலேயே சினிமா திரை அரங்குகளில் ஓடும் படத்தை, Jio gigafiber வழியாக ஒளிபரப்ப இருப்பதாகச் சொன்னார் முகேஷ் அம்பானி. அப்படி ஒளிபரப்பினால் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் சார் வியாபாரத்துக்கு பெரிய அடி விழும், வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனக் கண்ணீர் விடத் தொடங்கி இருக்கிறார்கள் மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உடைமையாளர்கள்.
10% காலி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio gigafiber திட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது போல முதல் நாளிலேயே வீட்டில் சினிமாக்களை ஒளிபரப்பினால், பெரிய பெரிய மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களில் இருக்கும் உணவகங்களில் சுமாராக 10 சதவிகிதம் அளவுக்கு வியாபாரம் காலியாகி விடும் எனச் சொல்லி பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் க்வால் (Kwal) உணவுக் குழும நிறுவனங்களின் இயக்குநர் சமீர் லம்பா. இந்த க்வால் உணவுக் குழுமங்கள் தான் குருகிராம் டி எல் எஃப் (DLF) மெகா மாலில் உணவகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவின் ஆயுள் காலி
ரிலையன்ஸ் Jio gigafiber திட்டத்தால் ஒரு சினிமாவின் வாழ்நாள் (Shelf Life) பெரிய அளவில் பாதிக்கப்படும். இன்று ஒரு நல்ல சினிமா என்றால் கூட அதன் வாழ் நாள் சுமாராக 4 - 7 நாட்கள் தான். இப்போது இந்த 4 - 7 நாட்கள் கூட குறைந்தால், பெரிய பெரிய சொகுசு மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் திரை அரங்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் ரஜ்னேஷ் மகஜன்.
என்ன மாதிரியான சினிமா
மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் சார்ந்த வியாபாரங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது, Jio gigafiber திட்டத்தில் என்ன விலைக்கு, என்ன மாதிரியான சினிமாக்கள் ஒளிபரப்பப்பட இருக்கிறது, என்பதைப் பொறுத்து மாறுபடும் எனச் சொல்லி இருக்கிறார் இன் ஆர்பிட்ஸ் மால்ஸ் (In Orbits Malls) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரஜ்னேஷ் மகஜன். இவரின் இன் ஆர்பிட்ஸ் மால்கள் இந்தியாவின் முக்கிய காஸ்மாபொலிட்டன் மற்றும் மெட்ரோ நகரங்களான மும்பை, ஹைதராபாத், பெங்களூரூ ஆகிய நகரங்களில் இருக்கிறது.
உணவகங்கள்
"எங்கள் உணவகங்களில் பாதிக்கு மேற்பட்ட அவுட் லெட்டுகள் பெரிய பெரிய மால்களுக்குள் தான் அமைந்திருக்கிறது. பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது எல்லாம் எங்கள் வியாபாரம் நன்றாக அதிகரித்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதோடு மால்களுக்கு பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் வந்து போவதையும் பார்த்திருக்கிறோம்" என்கிறார் கே எஃப் சி இந்தியா (KFC India) உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் மேனன். இவர்களுக்கு இந்தியா முழுக்க 100 நகரங்களில் சுமார் 400 அவுட் லெட்டுகள் இருக்கிறதாம்.
அடி பலம் தான்
ஜியோ வந்த போதே ஏர்டெல், வொடாஃபோன், ஐடியா போன்ற பல டெலிகாம் நிறுவனங்கள் கண்ணீர் விட்டது. இன்று அதே போல, மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் சார்ந்த பல்வேறு வியாபாரங்களைச் செய்யும் வியாபாரிகள் கண்ணீர் விடத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனமோ அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு வியாபாரத்தில் பட்டையைக் கிளப்ப வேண்டும் என்கிற அளவுக்கு வலுவான திட்டத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸின் இந்த புலிப் பாய்ச்சலில் இப்படி எத்தனை வியாபாரிகள் தலை உருளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.